2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்து போதித்த மிகப்பெரிய ஆன்மிக குருவான, புத்தரைப் பற்றி நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆனால் வரலாற்று புத்தர் எனப்படுவது ஷக்யமுனி புத்தர், புத்தர் மட்டுமல்ல. பௌத்த மதத்தில், எண்ணிலடங்கா புத்தர்கள் இருக்கின்றனர், உண்மையில், பௌத்தத்தை போதித்தற்கான உண்மையான திறவுகோல் என்பது பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உயிரும் புத்தராவதற்கான திறன் படைத்தவர்களே என்பதாகும்.
Who is buddha 01

வரலாற்று புத்தர்

பெரும்பாலான பாரம்பரிய வாழ்க்கை வரலாறுகளின்படி, புத்தராக மாறிய மனிதர், கிமு 5ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் உள்ள பிரபுத்துவ ஷக்கிய குலத்தில் பிறந்தவர். அவருக்கு சித்தார்த்த கௌதமர் என்று பெயரிடப்பட்டது, அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில், அசிதா என்ற புத்திசாலித் துறவு இந்தச் சிறு குழந்தை ஒன்று மிகப்பெரிய ராஜாவாகவோ அல்லது மிகப்பெரிய மதகுருவாகவோ மாறும் என்று தெரிவித்தார். சித்தார்த்தரின் தந்தை, சதோதனா அப்போது ஷக்ய குலத் தலைவராக இருந்தார், அவரது இளைய மகன் தனது அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஒரு பெரிய ராஜாவாக சித்தார்த்தர் உருவாக வேண்டும் என்றும் அவரின் பாதையில் இருந்து விலகிச் செல்லக்கூடிய எதிலிருந்தும் தன் மகனைக் காப்பாற்ற முடிவு செய்தார்.

சித்தார்த்தர் இளம் வயதில் குடும்ப அரண்மனையில் இருந்து தனித்து வைக்கப்பட்டு விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் மற்றும் அழகிய பெண்கள், தாமரைக் குளங்கள் மற்றும் அறுசுவை மாமிசங்கள் என்று சாத்தியமான அனைத்து ஆடம்பரமும் செய்து தரப்பட்டன. நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் அரண்மனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதால், அவர் எந்தவிதமான துன்பம் அல்லது துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார். காலப்போக்கில், சித்தார்த்தர் தனது படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார், மேலும் யசோதராவை மணந்தார், இந்த தம்பதிக்கு ராகுலா என்ற மகன் பிறந்தார்.

ஏறத்தாழ சுமார் 30 ஆண்டுகளாக, சித்தார்தர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தார், ஆனால் அரண்மனை சுவருக்கு வெளியே என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் அவருக்குள் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. "இந்த நிலம் எனக்கானது என்றால்," பின்னர் நிச்சயம் நான் அவற்றையும் என்னுடைய மக்களையும் பார்க்க வேண்டும் இல்லையா? என்று சிந்தித்தார். அதே சமயத்தில் சுத்தோதனா தன்னுடைய மகன் அரண்மனைக்கு வெளியே சுற்றிப் பார்ப்பதற்கு  செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தெருக்கள் சுத்தப்படுத்தப்பட்டன, வயதான மற்றும் நோய்வாய்பட்டவர்கள் மறைத்து வைக்கப்பட்டனர், ரத ஓட்டியான சன்னாவுடன் சித்தார்த் தெருவில் ரதத்தில் சென்றார், மக்கள் கையசைத்தும் புன்னகைத்தும் மகிழ்ந்தனர். இருப்பினும், கூட்டத்தின், நடுவே சாலையின் ஓரத்தில், குனிந்து நெளிவுற்ற ஒருவரைக் கவனித்தார். இருவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர், இந்த பாவப்பட்டவருக்கு என்ன நடந்தது என்று சன்னாவிடம் கேட்டார் சித்தார்த்தர். "நீங்கள் உங்கள் முன்னால் பார்ப்பவர் ஒரு வயதான நபர், நம் அனைவருக்குமாக காத்திருக்கு விதி," என்று சன்னா பதிலளித்தார். மேலும், சித்தார்த்தர் ஒரு நோய்வாய்ப்பட்ட நபரையும் சடலத்தையும் கண்டார், இரண்டும் தவிர்க்க முடியாதது என்பது மேலும் அவரது கண்களைத் திறந்தன - ஆனால் முற்றிலும் இயல்பானது - வாழ்க்கையின் சில பகுதிகள் கடைசியில் அவரையும் தொடும் என்பதை உணர்ந்தார்.

இறுதியில், அவர் துன்பத்தில் இருந்து விடுதலையைத் தேடும் புனிதர் ஒருவரைச் சந்தித்தார். இந்த முதல் மூன்று காட்சிகள் சித்தார்த்தர் அரண்மனை வாழ்க்கையால் துன்பங்களில் இருந்து காப்பாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அந்தப் புனிதரின் பார்வை அவருக்கு துன்பத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைத் தேடுவதற்கான சாத்தியத்தை எழுப்பியது.

சித்தார்த்தர் இதற்கு முன் முதியவர்களையோ அல்லது நோய்வாய்ப்பட்டவர்களையோ சந்தித்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் உண்மையில், அவர் உள்பட நாம் அனைவரும் - பொதுவாக துன்பங்களைப் புறக்கணித்து நம் வாழ்க்கையை எவ்வாறு வாழ்கிறோம் என்பதை அடையாளமாக இது காட்டுகிறது. அரண்மனைக்குத் திரும்பிய சித்தார்த்தர் ஒரு பெரிய மன உளைச்சலை உணர்ந்தார். அவர் தனது அன்புக்குரியவர்களால் சூழப்பட்ட ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தார், ஆனால் ஒரு நாள், அவரும் சுற்றி இருக்கும் அனைவரும் முதுமையடைந்து, நோய்வாய்ப்பட்டு, இறந்துவிடுவார்கள் என்பதை அறிந்த பின்பும் எப்படி அவரால் மகிழ்ச்சியாக அல்லது ஓய்வாக இருக்க முடியும்? எல்லோருக்கும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க ஆசைப்பட்ட அவர், அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை வாழ்வதற்காக ஒரு நாள் இரவில் அரண்மனையை விட்டுத் தப்பினார்.

சித்தார்த்தர் பல பெரிய குருக்களை சந்தித்தார், அவர்களின் வழிகாட்டுதல்களுடன் தியானத்தின் மூலம் மிக உயர்ந்த அளவிலான ஒருநிலைப்படுத்தல் நிலைகளை அடைந்தாலும், இந்த தியான நிலைகள் துன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வழிவகுக்காது என்பதால் அவர் தொடர்ந்து அதிருப்தியுடனே இருந்தார். அவர் சந்நியாச நடைமுறைகளுக்கு திரும்பினார், தன்னுடைய உடலுக்கான உணவு மற்றும் அனைத்து உடலுக்கான சவுகரியங்களையும் இழந்தார், மேலும் தியானம் பயிற்சி செய்வதில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். ஆறு வருடங்கள் இந்த நடைமுறைகளில் ஈடுபட்டார். அவரது உடல் மிகவும் மெல்லியதாக மாறியது, தோலின் மெல்லிய அடுக்கில் மூடப்பட்ட ஒரு எலும்புக்கூடாக எண்புதோல் போர்த்திய உடம்பாக இருந்தார்.

ஒரு நாள், ஆற்றோரம் அமர்ந்திருந்த போது, சிறு குழந்தைக்கு இசைக்கருவியை எப்படி இயக்க வேண்டும் என்று ஆசிரியர் ஒருவர் சொல்லிக்கொடுப்பதை கேட்டார்: "நரம்புகள் மிகவும் லேசாக இருந்தால், உன்னால் கருவியை இசைக்க முடியாது. அதே போன்று அது மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது, அப்படி இருந்து நரம்பு பிய்ந்து போய்விடும்" என ஆசிரியர் சொல்லிக் கொண்டு இருந்தார். இதன் மூலம், சித்தார்த்தர் தனது பல வருட துறவுப் பயிற்சியால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தார். அரண்மனையில் அவரது ஆடம்பர வாழ்க்கையைப் போலவே, துறவு நடைமுறைகளும் துன்பத்தை வெல்ல முடியாத ஒரு தீவிரமானவை. இந்த உச்சநிலைகளுக்கு இடையிலான நடுத்தர வழிதான் விடையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அந்த நேரத்தில், அவரைக் கடந்து சென்ற சுஜாதா என்ற இளம் பெண் சித்தார்த்தருக்கு பால், அசிரி போன்றவற்றை வழங்கினார். ஆறு ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த முதல் சரியான உணவு அதுவே. அவர் அந்த உணவை உண்டதைக் கண்ட அவருடன் இருந்த பிற துறவு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அத்தி மரத்திற்கு அடியில் சென்று அமர்ந்து விட்டார். "முழு விழிப்பையும் நான் பெறும் வரையில் நான் இந்த இருக்கையில் இருந்து எழப்போவதில்லை" என்று அங்கே அவர் தீர்மானித்தார். இப்போது போதி மரம் என்று அறியப்படும் அந்த மரத்தின் கீழ் தான், சித்தார்த்தர் முழு ஞானத்தை அடைந்து, விழிப்படைந்த ஒருவராக புத்தராக பின்னர் அறியப்பட்டார்.

அவருடைய ஞானமடைதலுக்குப் பிறகு, புத்தர் நான்கு மேன்மையான உண்மைகள் மற்றும் எண்மார்க்க பாதை பற்றிய போதனைகளை வழங்கினார். அடுத்த 40 ஆண்டுகள், அவர் வடஇந்தியாவின் சமவெளிகள் முழுவதும் பயணித்து தான் அடைந்த யதார்த்தங்களை மற்றவர்களும் அடையும் பொருட்டு போதித்தார். புத்தரின் போதனைகளை இந்தியா, ஆசியா மற்றும் உலகம் முழுமைக்கும் சென்று பரப்பும் ஒரு துறவு வரிசையான சங்காவை அவர் கண்டறிந்தார்.

தன்னுடைய 80வது வயதில் புத்தர் குஷிநகரில் இயற்கையுடன் கலந்தார். அவர் இறப்பதற்கு முன்னர் சங்காவிடம் போதனைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருக்கிறது தெளிவு தேவைப்படுகின்ற விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டார். தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு தர்மம் மற்றும் நெறிமுறையான சுயக்கட்டுப்பாட்டின் மீது நம்பிக்கை வைக்குமாறு அறிவுரை கூறி, அவர் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்: “துறவிகளே, இது உங்களுக்கு என்னுடைய கடைசி அறிவுரை. உலகில் உள்ள அனைத்து கூறுகளும் மாறக்கூடியவை. அவை நீடித்து இருக்காது. உங்கள் சொந்த மோட்சத்தைப் பெற கடினமாக உழையுங்கள்" என்றார், இவ்வாறு பேசி முடித்த பின்னர் வலது பக்கம் படுத்து இருந்த போது அவருடைய உயிர் பிரிந்தது.

புத்தர்கள் என்றால் என்ன?

வரலாற்று புத்தரைப் பற்றி நாம் பார்த்தேம், ஆனால், உண்மையில் புத்தர் என்பதன் அர்த்தம் என்ன?

எளிதில் சொல்வதானால், புத்தர் என்பவர் விழிப்படைந்த ஒருவர். புத்தர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தவர்கள். இரவு முழுவதும் கொண்ணடாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு ஆழ்ந்து உறங்கி எழும் வகையல்ல இது, மாறாக நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் வியாபித்திருக்கும் குழப்பத்தின் ஆழ்ந்த தூக்கம்; நாம் உண்மையில் எப்படி இருக்கிறோம், உண்மையில் எல்லாம் எப்படி இருக்கிறது என்பது பற்றிய குழப்பம்.

புத்தர்கள் கடவுள்களும் அல்ல படைப்பாளர்களும் அல்ல. எல்லா புத்தர்களும் நம்மைப் போன்று தோன்றியவர்களே, குழப்பம், சிக்கலான உணர்வுகள் மற்றும் ஏராளமான பிரச்னைகளால் நிரம்பியவர்கள். ஆனால், மெல்ல இரக்கம் மற்றும் அறிவின் பாதையை பின்பற்றத் தொடங்கியவர்கள், இந்த இரண்டு நேர்மறை குணங்களை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைத்தவர்கள், ஒருவர் ஞானத்தை அடைவது என்பத சாத்தியமே.

புத்தர்கள் மூன்று முக்கிய குணங்களை கொண்டவர்கள்:

  1. அறிவு - புத்தர் மனத் தடைகள் இல்லாதவர், அதனால் அவரால் எல்லாவற்றையும் முழுமையாக சரியாக புரிந்து கொள்ள முடியும், குறிப்பாக மற்றவர்களுக்கு எப்படி உதவுவது என்பதை அறிந்தவர்கள்.
  2. இரக்கம் - மேலே குறிப்பிடப்பட்ட அறிவால், நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் என்பதை பார்க்கும், புத்தர்கள் பெரிய இரக்கத்தை கொண்டிருப்பதனால் ஒவ்வொருவருக்கும் உதவுவதற்கான திறனை அறிந்தவர்கள். இரக்கம் இல்லாத அறிவாற்றல் ஒருவரை படித்தவராக்கலாம், ஆனால் அவரால் சமூகத்திற்கு அதிக பயன் இருக்காது. இரக்கம் என்பது ஒவ்வொருவரின் பலனிற்காகவும் செயலாற்றுவதற்காக உந்தும் சக்தியாகும். அதனாலேயே புத்தர்கள் நம் அனைவருடனும் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இந்த இரண்டாவது குணத்தை உருவாக்குகின்றனர்.
  3. திறன்கள் - துன்பத்தை எவ்வாறு அகற்றுவது என்பதை அறிவது, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உறுதியான விருப்பம் ஆகிய இரண்டு குணங்களோடு, பலவிதமான திறமையான வழிகளில் ஞானமடைதலுக்கான பாதைகளை கற்பிப்பதன் மூலம், மற்றவர்களுக்கு உண்மையில் நன்மை செய்யும் உண்மையான சக்தியும் திறமையும் புத்தர்களுக்கு உள்ளது.

தாங்கள் துன்பப்பட விரும்பாததைப் போல, மற்ற யாருமே பிரச்னைகளை விரும்பவில்லை என்பதை புத்தர்கள் புரிந்து கொண்டனர். அதனால், புத்தர்கள் தங்களுக்காக மட்டும் செயலாற்றாமல், பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் செயலாற்றினார்கள். தங்களை பராமரிக்க எப்படி அக்கறை கொள்கிறார்களோ அந்த அளவிற்கு மற்றவர்கள் மீதும் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.

அவர்களின் நம்பமுடியாத உறுதியான இரக்கத்தால் தூண்டப்பட்டு, எல்லா துன்பங்களையும் அகற்றுவதற்கான தீர்வை அவர்கள் கற்பிக்கிறார்கள், இது அறிவொளி என்று அழைக்கப்படுகிறது - யதார்த்தத்தையும் புனைக்கதைகளையும் சரியாக வேறுபடுத்துவதற்கான மனதின் தெளிவு. இந்த அறிவொளியின் மூலம், எல்லா எதிர்மறையான விஷயங்களிலிருந்தும் நாம் இறுதியாக விடுபடலாம்: குழப்பம், சுயநலம் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள். நாமும் பூரணமாக புத்தர்களாக மாறலாம், மேலும் முழுமையான உள் அமைதியை அனுபவிக்க முடியும்.

சுருக்கம்

புத்தர்கள் சிறந்த ஆசிரியர்கள், அவர்களின் திறன்மிகு வழிமுறைகளால் நமக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருப்பவர்கள். அவர்கள் இரக்கமுடையவர்கள் மேலும் எப்போதும் நமக்கு உதவி செய்து, நம்மை சரியான பாதையில் பொருத்துவதற்குத் தயாராக இருப்பவர்கள்.

சித்தார்த்தரைப் போல, நாமும் உலகத் துன்பங்களினால் பெரும்பாலும் குருடர்களாகவே இருக்கிறோம். அதை நாம் எவ்வளவு தவிர்க்கிறோம் அல்லது புறக்கணிக்கிறோம் என்பது பொருட்டல்ல, வயது மூப்பு, நோய்வாய்ப்படுதல் மற்றும் மரணம் நமக்கும் எதிர்காலத்தில் வரும். புத்தரின் வாழ்க்கை வரலாறு அவரைப் போலவே துன்பத்தின் உண்மைகளை எதிர்கொண்டு புரிந்துகொள்வதன் மூலம், வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து விரக்திகளிலிருந்தும் நம்மை விடுவிக்க முடியும் என்பதைக் காண்பதற்குத் தூண்டுகிறது. அவருடைய வாழ்க்கையும் போதனைகளும் நம்முடைய அழிவுகரமான உணர்ச்சிகள் மற்றும் குழப்பம் போன்றவற்றை வென்று வருவதற்கு நம்மால் முடிந்த சிறந்த முயற்சியை செய்ய வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது, இதனால் அவரைப் போலவே, நம்மாலும் எல்லா உயிரினங்களுக்கும் நன்மை செய்ய செயலாற்ற முடியும்.

Top