நன்னெறி வாழ்வை வாழ்வது எப்படி?

Uv how to lead an ethical life

சுயநலம் எதிர் பொதுநலம் - நன்னெறி வாழ்க்கைக்கான அடிப்படை

பௌத்தத்தின் உயிர்நாடி எதுவென்றால்: பிறருக்கு நம்மால் உதவ முடிந்தால், நாம் அதனை செய்ய வேண்டும்; நம்மால் இயலாவிட்டால், உதவி செய்யாவிட்டாலும் பிறருக்கு உபத்திரம் கொடுக்கக் கூடாது. இதுவே நன்னெறி வாழ்க்கையை நடத்துவதற்கான சாராம்சம்.

ஒவ்வொரு செயலுமே ஒரு நோக்கத்தில் இருந்து பிறக்கிறது; நாம் பிறருக்கு கேடு விளைவிப்பதும் ஒரு நோக்கத்தில் இருந்தே வருகிறது. எனவே பிறருக்கு உதவவும், பிறருக்கு சேவையாற்றவும் நமக்கு சில உந்துதலும், கருத்துரும் தேவைப்படுகிறது. நாம் ஏன் பிறருக்கு உதவ வேண்டும்? ஏன் பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது?

உதாரணத்திற்கு நாம் ஒருவருக்கு துன்பம் ஏற்படுத்துவதற்கு முன்னர், நமக்கு ஒரு விழிப்புணர்வு இருக்கிறது, அதனால் அது நம்மை விலகி இருக்கச் செய்கிறது. அதாவது நமக்கு ஒருவித உறுதிப்பாடு தேவை [தீங்கு ஏற்படுத்தக் கூடாது] ஆனால் மனதின் ஒரு குறிப்பிட்ட நிலை காரணமாக, மனதின் ஒரு பகுதி ஒருவருக்கு துன்பம் செய்ய நினைக்கும், அதே மனதின் மற்றொரு பகுதி இது தவறு, இதைச் செய்யக் கூடாது என உள்ளுணர்வு தரும்.  ஏனெனில் இது தவறு என்று நமக்கு தெரிந்தால், நமது மனத்திண்மை வளர்ச்சி பெறும் நம்மை தீயவையில் இருந்து விலகி இருக்கச் செய்யும். இரண்டு தேர்வுகளின் அடிப்படையில் [தீங்கு விளைவிப்பதற்காக அல்லது அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பதற்கு] சில செயல்கள் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்ற விழிப்புணர்வை நாம் கொண்டிருக்க வேண்டும். நீண்ட கால விளைவுகளை பகுத்தறியக் கூடிய அறிவு மனிதனுக்கு இருக்கிறது. எனவே பிறரை பார்க்கும் போது நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மை வந்து விடும், அது நம்மால் முடியும், அதுவே நம்மை தீமையில் செய்வதில் இருந்து விலகி இருக்கவும் செய்யும்.

நாம் இரண்டு வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை இப்போது பார்க்கலாம். முதலில், தன் நலத்தோடு சிந்தித்து நம்மால் முடிந்த உதவியை செய்கிறோம், நம்மால் அவ்வாறு செய்ய முடியும்; நம்மால் உதவ முடியாவிட்டால் பின் விலகி இருக்கிறோம் [எந்தத் தீங்கும் செய்யாமல்]. மற்றொரு அணுகுமுறை பிறர்நலன் பற்றி சிந்தித்து, நம்மால் முடிந்த உதவியைச் செய்கிறோம்; முடியாவிட்டால் விலகி இருக்கிறோம் [எந்தத் தீங்கும் செய்யாமல்]. பிறருக்கு தீங்கு ஏற்படுத்துவதில் இருந்து விலகி இருக்கும் போது ஏற்படும் எண்ணம்: “நான் இதைச் செய்தால் சட்ட விளைவுகள் உள்பட அனைத்து எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க வேண்டும்” ஆகவே இந்த காரணத்திற்காக நம்மை கட்டுப்படுத்திக் கொள்வதால் சுயநலத்தின் காரணமாகவே விலகி இருக்கச் செய்கிறது.  இப்போது பிறர் நலனே நம் நலன் என சிந்தித்தால், நமது எண்ணம் இவ்வாறாக இருக்கும்: “பிறரும் நம்மைப் போலத் தான். அவர்களும் வலி மற்றும் வேதனையை விரும்பமாட்டார்கள்; ஆகையால், நாம் பிறருக்கு தீங்கு ஏற்படுத்துவதில் இருந்து நம்மை நாமே விலக்கிக் கொள்வோம்”.

[நம் மனதை] நாம் இவ்வாறாக பயிற்சி செய்தால், முதலில் தன்நலம் பற்றி சிந்தித்தாலும் பின்னர் பிறர் நலன் பற்றிய உறுதியான சிந்தனை ஏற்படும். விளைவுகளை பொறுத்தமட்டில், பிறரைப் பற்றி சிந்திப்பதே மிகவும் சக்திவாய்ந்தது. பிரதிமோக்ஷாவில் – தனி மனித விடுதலைக்கான சூளுரை, துறவற பயிற்சிக்கான வினய பாரம்பரியம் – முதன்மையான அடிப்படை சிந்தனையே தன் நலம் இதனாலேயே தீங்கு விளைவிப்பதில் இருந்து நம்மை விலக்கிக் கொள்கிறோம். ஏனெனில் நமது இலக்கு சுதந்திரம். போதிசத்வா பயிற்சியில், பிறருக்கு தீங்கு ஏற்படுத்துவதில் இருந்து விலகி இருப்பதற்கான முக்கிய காரணம் பிறர் நலனில் அக்கறை காட்டுவது. இரண்டவதாக, நான் அடிக்கடி சொல்வது தான் பிறருக்கு தீங்கு ஏற்படுத்துவதில் இருந்து விலகி இருப்பதும், பிறர் நலன் கருதி உதவி செய்வதும் அண்டத்தில் நமக்கும் இருக்கும் பொறுப்புணர்விற்கான தொடர்பு. 

மனிதர்களாக நம்முடைய அடிப்படை இயல்பு

பொதுவாக மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள். அது யாராக இருந்தாலும், அவர்களது உயிர்வாழ்தல் எஞ்சி இருக்கும் மனிதநேயத்தின் அடிப்படையிலானது. தனி மனித உயிர்வாழ்தல் மற்றும் நல்வாழ்க்கை என்பது சமூகத்தை சார்ந்தது, பிறரின் நலன் பற்றி சிந்திக்க வேண்டிய தேவையும், அதனை செயல்படுத்த நினைப்பது நம்முடைய அடிப்படைய இயல்பு. உதாரணத்திற்கு பபூன்களை எடுத்துக் கொண்டால், மூத்தவர் மற்றவர்களை பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறார். மற்றவர்களுக்கு உணவளிக்கும் போது ஒரு வயதான ஆண் பபூன் மட்டும் ஒரு பக்கமாக கவனித்துக் கொண்டே இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருக்கும் வலிமையான பபூன் சமூகத்திற்காக மற்றவர்களை பராமரிக்கும் உதவியை செய்கிறது.

பண்டைய வரலாற்று காலத்தில் மனிதர்களிடம் கல்வியறிவோ அல்லது தொழில்நுட்பமோ இல்லை. அடிப்படை மனித சமூகம் மிக எளிமையானது: அனைவரும் ஒற்றுமையாகவும், பகிர்ந்தும் பணியாற்றினார்கள். கம்யூனிசவாதிகள் இதையே உண்மையான கம்யூனிசம் என்பார்கள்: அனைவரும் உழைத்து ஒன்றாக மகிழ்ந்திருப்பது. மனித நாகரிகம் வளர்ச்சி பெறத் தொடங்கிறது, கல்வி வளர்ச்சியடைந்தது. [மனிதன்] மனது சொகுசு வாழ்க்கைக்கு மாறியது எனவே பேராசையும் கூடியது. இவை வெறுப்பு, பொறாமையை கொண்டுவர காலப்போக்கில் அது மென்மேலும் உறுதிப்பெற்றுவிட்டது.

இன்றைய, 21ம் நூற்றாண்டில், [மனித சமூகத்தில்] பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. நம்மிடையே வேறுபாடுகள் வளர்ந்துவிட்டது – கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பின்பலத்தில் பலவிதமான வேறுபாடுகள். வயது மற்றும் இனத்திலும்கூட வேறுபாடு – இவையனைத்துமே இரண்டாம்பட்சம் தான். அடிப்படையில் நாம் அனைவருமே மனிதர்கள் நாம் அனைவருமே சமமானவர்கள். சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே இது தான் மனித அளவீடு.

சிறு குழந்தைகளின் மனப்பான்மை அப்படி இல்லை. அவர்கள் சமூக பின்புலம், மதம், இனம், நிறம் அல்லது மற்றவர்களின் சொத்து பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடுவார்கள்; நேர்மையாகவும் விளையாடுவார்கள், இதனால் அவர்களால் நீண்ட காலத்திற்கு நட்பு பாராட்ட முடிகிறது. நாம் இப்போது வளர்ந்து விட்டோம் அறிவாளிகளாகவும், வளர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கிறோம், ஆனால் நாம் மற்றவர்களின் சமூக பின்பலத்தை மதிப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். “நான் சிரித்தால், எனக்குத் தேவையானது கிடைக்குமா; முகம் சுளித்தால், ஏதாவது கிடைக்காமல் போய்விடுமா?” என்று நாம் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறோம். 

உலகளாவிய பொறுப்பு

உலகளாவிய அறிவு அல்லது உலகளாவிய பொறுப்புணர்வு மனிதனை பொறுத்தே செயல்படுகிறது.  பிறர் மீது நாம் அக்கறையாக இருக்கிறோம் ஏனெனில்: “நான் அவர்களின் ஒருவன்; என்னுடைய நலன் அவர்களைச் சார்ந்து இருக்கிறது என்ன வேறுபாடு என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.”  வேறுபாடுகள் எப்போதும் இருக்கும்; ஆனால் இது உதவியாக இருக்கும்.

பல நூற்றாண்டுகளாக மக்கள் தொகையானது இந்தக் கிரகத்தில் 100 கோடியாகவே இருந்தது; தற்போது 600 கோடியாக இருக்கிறது. அதிக மக்கள் தொகை காரணமாக ஒரு நாடு தன்னுடைய மக்கள் தொகைக்கேற்க உணவு மற்றும் மூலதனங்களை கொடுக்க முடியவில்லை. எனவே நாம் உலகளாவிய பொருளாதாரத்தை கொண்டு வந்தோம். எனவே இன்றைய யதார்த்த நிலையானது, உலகம் மிகச் சிறியது, அவை அதிக அளவில் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ளது. இதுவே யதார்த்தம். இவையெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல இருக்கும் பிரச்னை சுற்றுச்சூழலியல்: புவி வெப்பமடைதல். ஏதோ ஒன்றிரண்டு நாடுகளைப் பற்றியதல்ல, இந்த கிரகத்தில் உள்ள 600 கோடி உயிர்வாழினங்கள் மீதான அக்கறை. புதிய யதார்த்தத்தின் தேவை உலகத்தின் பொறுப்புணர்வை உணர்தல்.  

உதாரணத்திற்கு, பழங்காலத்தில், ஆங்கிலேயர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தார்கள் சில சமயங்களில் பூமியின் மற்ற பகுதிகளை தங்களது தேவைக்காக சுரண்டினார்கள். மற்றவர்களின் உணர்வகள் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. சரி, அது கடந்த காலம். ஆனால் தற்போது வேறுபாடு இருக்கிறது; பல விஷயங்கள் மாறி இருக்கிறது. நாம் இப்போது பிற நாடுகளையும் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

உண்மையில் பிரிட்டிஷ் பேரரசர்கள் சில நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்கள். இந்தியாவிற்கு ஆங்கில மொழியில் நல்ல கல்வியைக் கொண்டு வந்தார்கள். இந்தியா இதனை ஒப்பு கொண்டே ஆக வேண்டும். இதே போன்று பிரிட்டிஷார் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்தனர், ரயில்சாலை திட்டம். நான் இந்தியாவிற்கு வந்த போது உயிரோடு இருந்த சில காந்தியவாதிகள், காந்தியவாதத்தின் அகிம்சை வழிகளை அறிவுரைத்தனர். பிரிட்டிஷ் பேரரசர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை அந்த நேரத்தில் தான், நான் உணர்ந்தேன். ஆனால் அதன் பிறகு சுதந்திர இந்தியாவில் நீதியமைப்பு, எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்டவை இருந்தது. எனவே நான் ஆழ்ந்து பிரதிபலித்துப் பார்த்தால், இவையனைத்துமே நல்ல விஷயங்கள்.  

இன்று தேசத்திற்கு தேசம், கண்டத்திற்கு கண்டம் அதிக அளவில் சார்ந்திருக்கிறோம். இந்த யதார்த்த நிலையில் நமக்கு நிச்சயம் உலகளாவிய பொறுப்புணர்வு தேவை. தன்நலம் என்பது பிறரின் வளர்ச்சி மற்றும் நலன் அடிப்படையில் இருக்க வேண்டும். தன் நலம் எனும் போது பிறர் நலனிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார சந்தையில் இது ஏற்கனவே இருக்கிறது. மாறுபட்ட கொள்கைகள் இருப்பினும், ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் உலகளாவிய பொருளாதாரத்தில் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதால் அது பற்றி கலந்தரையாடுகிறோம். எனவே உலகளாவிய பொறுப்புணர்வு என்பது பிறர் நலனுக்கு மரியாதை அளிக்கும் அடிப்படையிலானது என்பது மிக முக்கியம். 

நாம் பிறரை சகோதரனாக, சகோதரிகயாக நமக்கு நெருக்கமானவர்களாகக் கருத வேண்டும். மதம் முக்கியமல்ல. நமக்கும் இந்த சகோதரத்துவம் மிக அவசியம். “எங்களுக்கும் அவர்களுக்கும்” என்ற கருத்துருவில் – ஒரு குறிப்பிட்ட அளவில், நிச்சயமாக நாம் சொல்லலாம் – ஆனால் இந்த மொத்த உலகமும் “நம்மை” ஒரு அங்கமாகக் கருத வேண்டும். நம் சுற்றத்தாரின் நலனே நம்முடைய தன் நலன்.

மனநிறைவு

தனியொருவனாக நன்னெறி வாழ்க்கை நடத்துவது, அதுவும் பிறருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் முடிந்தால் உதவியும் செய்வதே. [நான் செய்து கொண்டிருக்கிறேன்] பிறரை எடுத்துக் கொண்டால் நலன் என்பது நமது சுய நெறிகளை அடிப்படையாகக் கொண்டது – இது நெறிமுறைகளின் பரந்த நோக்கமாகும். நமது சொந்த வாழ்க்கை முறையில் இந்த காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏழை, பணக்காரரிடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது, ஐக்கிய மாநிலங்களிலும் இதே நிலை தான். பணக்கார நாடான அமெரிக்காவில், ஏழ்மை என்னும் ஓட்டைகள் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. ஒரு முறை நான் பணக்கார நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் இருந்தேன், அப்போது நான் அங்கு பல ஏழ்மைப் பகுதிகளைக் கண்டேன். அந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் எதுவும் போதுமான அளவில் கவனிக்கப்படவில்லை.  [இதே போன்று,] சர்வதேச அளவில், தொழில்சார்ந்த வடக்கு மிகுந்த வளர்ச்சி பெற்றதாகவும் செல்வம் செழிந்ததாகவும் இருக்கிறது [புவியின் மற்ற பகுதிகளைக் காட்டிலும்]; உலகின் தெற்கிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் பட்டினியோடு வாடுகின்றன. இது தார்மீக ரீதியான தவறு மட்டுமல்ல; மிகப்பெரிய பிரச்னைகளுக்கான மூலாதாரம். எனவே, சில வல்லரசு நாடுகள் இதை கவனத்தில் கொண்டு தங்களது வாழ்க்கை முறையை வகுக்க வேண்டும்; மனநிறைவை அவர்கள் பழக்கிக் கொள்ள வேண்டும்.

15 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு முறை ஜப்பான் மக்களிடம் என்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தினேன். ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரம் வளர வேண்டும், எல்லா ஆண்டும் பொருள் முன்னேற்றம் காண வேண்டும் என நினைப்பது மிகப்பெரிய தவறு என்றேன். ஒரு நாள் உங்களுடைய பொருளாதாரம் கட்டுப்படுத்தப்படுவதை நீங்களே பார்ப்பீர்கள். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த ஒரு நிலை வந்தாலும், உங்கள் மனதில் அது பேரழிவாக இருக்காது என்று கூறி இருந்தேன். நான் சொன்னது போலவே சில ஆண்டுகள் கழித்து, அதே நிலை ஜப்பானில் வந்தது.  

சிலரின் வாழ்க்கை முறை மிக ஆடம்பரமானதாக இருக்கும். திருடாமல், சுரண்டாமல், ஏமாற்றாமல் செல்வம் சேர்த்திருப்பர். இந்த கோணத்தில் அவர்களது தன் நலனில் எந்தத் தவறும் இல்லை ஏனெனில் அவர்கள் பணம் சம்பாதித்த வழி நெறிதவறியதல்ல. ஆனால் பிறர் நலன் என்ற கோணத்தில் பார்த்தால், தங்களைப் பொறுத்த வரையில் எந்தத் தவறும் இல்லை; எனினும், நெறிமுறைப்படி, மற்றவர் பசியால் வாடும் போது இது நல்லதல்ல. அனைவருமே ஒரே விதமான ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றால் அது சரியே; ஆனால் அந்த நிலையை அடையும் வரை மனநிறைவோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை முறை. ஜப்பான், ஐக்கிய மாநிலங்கள் மற்றும் இன்னும் சில வசதிபடைத்த சமூகங்களை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன், வார்க்கை முறையில் நிச்சயம் சில மாற்றங்கள் தேவை.

பல நாடுகளில் ஒரு குடும்பத்திற்கு 2 அல்லது 3 கார்கள் கூட இருக்கிறது. இந்தியா மற்றும் சீனாவை கற்பனை செய்து பாருங்கள், இந்த இரண்டு நாடுகளிலும் மொத்தம் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கின்றனர். இரண்டு கோடி மக்களும் இரண்டு கோடியோ அதற்கும் அதிகமாகவோ கார்களை வாங்கினால், நிலைமை மிக மோசமானதாகிவிடும். எரிபொருள், பொருள் வளம், இயற்கை வளம் உள்ளிட்டவை மிகப்பெரிய சிக்கல்களையும் சவால்களையும் சந்திக்கும். நிலைமை மிக சிக்கலாகி விடும்.

சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்டுதல்

நன்னெறி வாழ்க்கைக்கான கூடுதல் அம்சம், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ளுதல், உதாரணத்திற்கு நீரைப் பயன்படுத்துதல். என்னுடைய சொந்த பங்களிப்பு, சிறுபிள்ளைதனமாகக் கூட இருக்கலாம், பல ஆண்டுகளாகவே நான் குளியல்தொட்டியை பயன்படுத்துவதில்லை; ஷவர் மட்டுமே பயன்படுத்துகிறேன். குளியல் தொட்டியில் ஏராளமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.  நான் கூறுவது வேடிக்கையாக கூட இருக்கலாம், தினந்தோறும் 2 முறை குளிப்பதால் நான் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு குளியல் தொட்டியில் பயன்படுத்தும் நீரின் அளவை சமன்செய்துவிடும். ஆனால் அறையை விட்டு செல்லும் போது மின்விளக்குகளை அணைக்க எப்போதும் மறந்ததில்லை. சுற்றுச்சூழலுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பு. ஒரு குறிப்பிட்ட நன்னெறி வாழ்க்கை முறையானது உலகளாவிய பொறுப்புணர்வில் இருந்து வருகிறது.

பிறருக்கு எப்படி உதவுவது

பிறருக்கு எப்படி உதவுவது எனக் கேட்டால், அதற்குப் பல வழிகள் இருக்கின்றன; பெரும்பாலும் அவை சூழ்நிலைகள் சார்ந்தே இருக்கும். எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் போது நான் என்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தேன், என்னுடைய பயிற்றுநர் லிங் ரின்போச் எப்போதும் ஒரு சவுக்கை வைத்திருப்பார். ஒரு சமயத்தின் மற்றவர்கக்கு உதவுதல்

நானும் என்னுடைய மூத்த சகோதரனும் படித்துக் கொண்டிருந்தோம். உண்மையில் அங்கு இரண்டு சவுக்குகள் இருந்தன. ஒரு சவுக்க மஞ்சள் நிறத்தில் இருந்தது – புனித சவுக்கு அது, புனிதர் தலாய் லாமாவிற்கான சவுக்கு. அந்த புனித சவுக்கை பயன்படுத்தினாலும் எந்தப் புனித வலியும் இருக்காது என்று நான் நினைக்கவில்லை. இது ஒரு முறையாக கடுமையானதாகத் தோன்றும் ஆனால் உண்மையில் அது மிகவும் உதவியானது.

நோக்கத்தை பொறுத்தே ஒரு செயல் உதவியானதா அல்லது உபத்திரமானதா என்பதன் அடிப்படை இருக்கிறது. பிறரின் நீண்டகால நல்வாழ்க்கை பற்றிய நேர்மையான அக்கறை காரணமாக சில சமயங்களில் அவை கடினமானதாக இருக்கலாம், சில நேரங்களில் கனிவானதாகவும் இருக்கும். சில சமயங்களில் ஒரு சிறு பொய் கூட உதவும். உதாரணத்திற்கு தொலைதூரை நாட்டில் இருக்கும் உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லது பெற்றோர் மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கிறார் அல்லது மரணத்தின் வாசலில் இருக்கிறார் அது உங்களுக்கு தெரிகிறது. ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரியும் மற்றவரிடம் அவர்களின் பெற்றோர் மரணத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்பதைக் கூறினால் அந்த நபர் மிகவும் கவலைப்படுவார், மனவேதனையடைவார், மயக்கமடையக் கூட வாய்ப்பிருக்கிறது. எனவே “அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்” என்று நீங்கள் சொல்ல வேண்டும். மற்றவர் மீது அக்கறையும், அவர்கள் வேதனைப்படக் கூடாது என்று நூறு சதவிகிதம் நினைத்தால், அந்த மாதிரியான நேரத்தில் கூறப்படும் பொய் தன் நலப் பார்வையில் நெறிதவறியதாக இருந்தாலும், பொதுநலப் பார்வையில் இதுவே சாலச் சிறந்தது.

வன்முறை Vs வன்முறையற்ற வழிகள்

பிறருக்கு எவ்வாறு சிறந்த உதவியை செய்வது? அதுமிகக் கடினம். நமக்கு ஞானம் தேவை; சூழ்நிலைகள் பற்றிய தெளிவான விழிப்புணர்வு தேவை; வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வழிகளை பயன்படுத்தும் வளைந்துகொடுக்கத் தன்மை நமக்கு தேவை. மிக முக்கியமாக, நம்முடைய நோக்கம்: பிறர் மீது உண்மையிலேயே நாம் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

உதாரணத்திற்கு, ஒரு வழி வன்முறையானதா அல்லது வன்முறையற்றதா என்பது அதன் நோக்கத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. தீங்கு ஏற்படுத்தாத ஒரு பொய்யை சொன்னாலும் வன்முறை தான், ஆனால் அதன் நோக்கம் பிறருக்கு உதவுவதற்கான வழியாக இருக்க வேண்டும். எனவே அந்தப் பார்வையில் அது வன்முறையற்ற வழியாகும். மற்றொரு புறம், ஒருவரை அழிக்கும் நோக்கத்தில் பரிசே கொடுத்தாலும் அது வன்முறையற்றதாகத் தோன்றலாம்; ஆனால் பிறரை ஏமாற்ற நினைத்து அவரைச் சுரண்டுகிறோம், இது வன்முறைக்கான வழி. அதனால் ஒரு செயல் வன்முறையா அல்லது வன்முறையற்றதா என்பது நோக்கத்தின் அடிப்படையிலேயே அமையும். எல்லா மனிதர்களின் செயல்களும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இலக்கை சார்ந்தும் அது இருக்கிறது; ஆனால் நம்முடைய குறிக்கோள் இலக்காகவும், நோக்கம் கோபமாகவும் இருந்தால், அது மிகக் கடினம். அதனால், இறுதியில் நோக்கம் என்பதும் மிக முக்கியமாகும்.

 மதங்களுக்குள்ளே நல்லிணக்கம்

இதுவரை நாம் இங்கு கலந்துரையாடியதில் இருந்த நீங்கள் உங்களுடன் என்ன வீட்டிற்கு எடுத்து செல்லப்போகிறீர்கள், முக்கியமான விஷயம் உங்களுடைய உள்ளார்ந்த அமைதியை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இது பற்றி நாம் கட்டாயம் சிந்தித்து நமக்குள்ளாகவே ஏற்படுத்த வேண்டும். அதன் கூடவே இங்கு இருக்கும் மக்களில் யாரேனும் ஒரு மதத்தை பின்பற்றுபவராகவோ, மத நம்பிக்கை உடையவர்களாகவோ இருந்தால், அவர்களுக்க நான் வலியுறுத்தி சொல்வது மதங்களுக்குள்ளேயான இணக்கம் எப்போதும் தேவை. எல்லா முக்கிய மதத்தினரும் சூரியன் மற்றும் சந்திரனை வழிபடும் சிறுபான்மையினர் அல்ல – அவர்களுக்கு பெரிய தத்துவம் இல்லை – ஆனால் பெரும்பாலான முக்கிய மதங்கள் சில தத்துவம் அல்லது இறையியலை அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில் அவர்களின் மதங்கள் குறிப்பிட்ட தத்துவத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கிறது. ஆனால் வெவ்வேறு தத்துவங்கள் இருந்தாலும், எல்லா மதங்களும் மிக உயர்வாக போதிப்பது அன்பு மற்றும் கருணையை.

கருணை இருந்தால் மன்னிக்கும் குணம் தானாகவே வந்துவிடும், அதன்கூடவே சகிப்புத் தன்மை மற்றும் மனநிறைவும் வந்து சேரும். இந்த மூன்று காரணிகளால் நிம்மதி இருக்கும். இது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. நாம் பேசிக் கொண்டிருக்கும் அடிப்படை மனித மதிப்புகளை விரிவாக்கம் செய்வதற்கு இவை அடிப்படையாகும். எனவே இது தொடர்புடைய, நம் எல்லா மதங்களும் மகிழ்ச்சியின் அடிப்படையை நமக்கு ஊக்குவிக்கின்றன, அதாவது ஒரு நன்னெறி வாழ்க்கையை நடத்துகின்றன. எனவே, எல்லா மதங்களும் ஒரே செய்தியை கொண்டிருப்பதால், அவை அனைத்திற்கும் மனித குலத்திற்கு உதவ ஒரே மாதிரியான ஆற்றல் இருக்கிறது.

வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு போதனைகள் வந்திருக்கின்றன. அது மிக அவசியம். இந்த வெவ்வேறு நேரங்கள், இடங்கள் மற்றும் வெவ்வேறு விதமான வாழ்க்கை வழிகள் சுற்றுச்சூழல் வேறுபாடுகளால் வந்தவை, மதத்தில் மேம்பட்ட வித்தியாசம் ஏற்படவும் அதுவே காரணமாகிறது. அந்த ஒவ்வொரு காலத்திற்கும், சில மதக் கருத்துகள் பொருத்தமானவை [எனவே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன]. இதன் காரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதங்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளன. இந்த வகையான வசதிபடைத்த மரபுகளும் நமக்குத் தேவை: அவை எல்லா வகையான வெவ்வேறு விதமான மக்களுக்கும் பொருந்துகின்றன. ஒரு மதம் அனைவருக்கும் பொருந்தாது, சேவை செய்யவும் முடியாது.

புத்தர் காலத்தில், பல்வேறு பௌத்தம் அல்லாத மரபுகள் இந்தியாவில் இருந்தன. இந்தியர்கள் அனைவரையும் புத்த மதத்திற்கு மாற்ற புத்தர் முயற்சிக்கவில்லை. மற்ற மதங்களும் சரியோ. எப்போதாவது, அவை தங்களுக்குள்ளாக விவாதம் செய்திருக்கின்றன. குறிப்பாக புத்தரின் வருகைக்குப் பிறகு, பல நூற்றாண்டுகளாக இருந்த மதகுருமார்களும் ஒருவருக்கொருவர் விவாதித்திருக்கின்றனர். இந்த விவாதங்கள் மிகவும் உதவிகரமானவை, அறிவு ஈட்டவியல் துறையில் இது மிக முக்கியமானது. எனவே, இயற்கையாகவே இது முன்னேற்றத்தை கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்த விவாதங்களில் சிறு வன்முறைகள் நிகழ்ந்திருக்கலாம் அவை துரதிஷ்டவசமானவை; ஆனால், பொதுவாக, இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாகும்.

இந்தியா, மத சகிப்புத் தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பல நூற்றாண்டுகளாக ஒரு பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது, அது இன்னும் இந்தியாவில் உயிர்ப்புடன் இருக்கிறது. இது உலகின் பிற பகுதிகளுக்கு சிறந்த மாதிரி. 

பழங்காலத்தில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர், அதனால் பரவாயில்லை. ஆனால் தற்போது நாம் வேறுபட்ட சூழலில் இருக்கிறோம். உதாரணத்திற்கு லண்டனை எடுத்துக் கொண்டால் பல்வேறு மதங்களை உள்ளடக்கிய சமூகம். மத சகிப்புத் தன்மை என்பது மிக முக்கியம். எனவே உங்களில் யாரக்காவது மத நம்பிக்கை இருந்தால்: இணக்கம் மற்றும் சகிப்புத்தான்மை மிக முக்கியம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இதற்கான பங்களிப்பை செலுத்துங்கள்.

Top