ஒரு புத்தரை காட்சிப்படுத்துதல்

காட்சிப்படுத்துதலில் பல்வேறு தியான பயிற்சிகள் இணைந்துள்ளன. மொழிபெயர்க்கும் போது “காட்சிப்படுத்துதல்” என்ற வார்த்தைக்கு சற்றே அர்த்தம் மாறலாம், ஏனெனில் நாம் நம்முடைய கண்களால் பார்க்கப் போவதில்லை. நாம் நம்முடைய கற்பனையோடு செயல்படுவதால், இது காட்சி மட்டுமல்ல, ஓசைகள், வாசனைகள், சுவைகள் மற்றும் தொடுதிறன்களையும் கூட நாம் கற்பனை செய்ய வேண்டும். பல்வேறு பொருட்களை நாம் மனதால் காணிக்கையாக்கும் போது, அதில் இருந்து கிடைக்கும் உணர்வின் இன்பத்தையும் நாம் கற்பனை செய்ய வேண்டும். அதே போன்று நாம் இரண்டு – பரிமான படங்களை காட்சிப்படுத்தப் போவதில்லை; நாம் நேரலையில் காட்சிப்படுத்த வேண்டும், முப்பரிமான உருவங்கள் என்பது வெறும் படங்களோ, ஒரு சிலையோ அல்லது ஒரு கார்ட்டூன் உருவமோ அல்ல அவை வெளிச்சத்தால் உருவானவை.  

புத்தர் மீது கவனம் செலுத்துங்கள்

மகாயன பாரம்பரியத்தில் ஒருமுகப்படுத்துதல் பயிற்சியை செய்யும் போது, செய்வதற்கு எளிது என்பதால் சுவாசத்தில் கவனம் செலுத்துமாறு பல ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர். பொதுவான சிறந்த பயிற்சி, எவ்வாறாயினும், இந்த பாரம்பரியத்தில் சிறிய புத்தரை காட்சிப்படுத்துதல் நலம், ஒருமுகப்படுத்துதலைப் பெறலாம். நாம் ஒரு ஆப்பிளை உற்றுப் பார்த்தும் கூட ஒருமுகப்படுத்தலை பெறலாம், ஆனால் உண்மையில், ஆப்பிளை உற்றுநோக்குவதால் என்ன பலன்? நாம் புத்தர் மீது கவனம் செலுத்தினால், ஒருமுகப்படுத்தலை பெறுவதுடன் கூடுதலாக, புத்தரின் குணங்கள் குறித்தும் நாம் கூடுதல் விழிப்புடனே இருப்போம், இதனால் புத்தர் சுட்டிக்காட்டியதைப் போல நம்முடைய வாழ்வில் (அடைக்கலம்) பாதுகாப்பான திசையை செயல்படுத்துவதை  சேர்க்க முடியும், போதிச்சிட்டாவுடன் நமக்கு நாமே புத்தராக மாற இலக்காகலாம். 

மேலும், பண்டைய இந்திய குரு அசங்கா, சிறந்த ஒருமுகப்படுத்தலை அடைதல் என்பது உணர்வு நிலையில் இல்லாமல் மன உணர்வு நிலையில் இருந்து வருவதாக சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில் நாம் இந்த ஒருமுகப்படுத்தலை அன்பு, இரக்கம், வெற்றிடத்தை புரிதல் மற்றும் நம்முடைய மனதுடன் சேர்ந்தவற்றை உருவாக்க செயல்படுத்தப் போகிறோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் மனநிலையில் ஒருமுகப்படுத்தலைப் பெற, புத்தர் உருவத்தை காட்சிப்படுத்துதல் ஒரு ஆயுதம், பின்னர், நம்முடைய மனதின்  உணர்வு நிலையை பயிற்சித்தல். இதனால், குறிப்பாக திபெத்திய கெலுக்  பாரம்பரியத்தில், புத்தரை காட்சிப்படுத்துவதில் சிறந்த ஒருநிலைப்படுத்தலை பெற்றெடுத்த நாம் எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறோம்.

திபெத்திய பாரம்பரியங்களான சக்யா, நைங்மா மற்றும் கக்யூ எதைப்பற்றியது? அங்கும் நாம் சுவாசத்தில் கவனம் செலுத்துவது அல்லது ஒரு ஓவியத்தை பார்ப்பதில் கவனம் செலுத்துதல் அல்லது ஒரு புத்தர் சிலையை பார்த்தல் போன்ற அறிவுரைகளை  அவ்வபோது காண்கிறோமா? இது அசங்காவின் அறிவுரையோடு முரண்படுகிறதா? இல்லவே இல்லை, மனம் எப்படி பொருட்களை அறிந்துணர்கிறது என்பதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தைப் பார்த்தால், இந்த மூன்று கருத்துக்களும் கண் உணர்நிலையென்பது நிற வடிவங்களில் மட்டுமே விழிப்புடன் இருக்கிறது மேலும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு கணம் மட்டுமே என்கின்றன. அதே போன்று, காது உணர்நிலை என்பது ஓசைகளுக்கு மட்டுமே விழிப்புடன் இருக்கிறது, ஒரு நேரத்தில் ஒன்று மட்டுமே.  கருத்தியல் அறிவாற்றல் அனைத்தையும் ஒன்று சேர்க்கிறது, இதைத் தான் நாம் “இயல்பறிவு பொருள்” என்று அழைக்கிறோம். உதாரணத்திற்கு, ஆப்பிள் ஒரு சிவப்பு உருளை வடிவம் மட்டுமல்ல. மேலும் அது சுவையானது அல்லது வாசனையானது மட்டுமல்ல. அது உங்கள் கையில் இருக்கிறது என்ற தொடு உணர்வு மட்டுமல்ல, அல்லது நீங்கள் கடிக்கும் போது வரும் சப்தம் மட்டுமே கூட அல்ல. இது ஒரு கணம் மட்டுமே இருந்து விட்டு பின்னர், அடுத்ததாக முற்றிலும் வேறுபட்ட பொருளாவதில்லை; காலப்போக்கில் அங்கு தொடர்ச்சி இருக்கிறது. கடைசியில் ஆப்பிள் அழுகி விழும், ஆனால் வழக்கமான ஆப்பிள் சில நாட்களுக்கு நீடிக்கும். நீங்கள் ஆப்பிளைப் பார்க்கும் போது உண்மையில் உங்கள் மனம் ஒரு கட்டமைப்பை காண்கிறது. 

அறிவாற்றல் தொடர்பான இந்த விளக்கத்தின் படி, ஆப்பிள் அல்லது சுவாசத்தின் மீது நாம் கவனம் செலுத்தினால், அது கருத்தியல் பொருள், மேலும் கருத்தியல் பொருள் மன உணர்வு நிலை மீது கவனம் செலுத்துகின்றன. கருத்தியல் ரீதியாக நாம் வண்ணமூட்டிய வடிவங்கள், வாசனைகள் மற்றும் தொடர்ச்சியான தருணங்களை ஒருங்கிணைத்து ஒரு பொருளுக்குள் செலுத்துகிறோம், ஆதலால் பொது அறிவுடன் அதனை “ஆப்பிள்” என்று அழைக்கிறோம். எனவே, இந்தப் பள்ளிகள் மன உணர்வு நிலை மூலமாகவும் ஒருநிலைப்படுத்தலை மேம்படுத்த முடியும் என்ற அசங்காவின் வலியுறுத்தல்களைப் பெருமைப்படுத்துகின்றன. 

உண்மையான பயிற்சி

ஒருமுகப்படுத்தலைப் பெறுவதற்காக நாம் புத்தர் உருவத்துடன் செயலாற்றினால், பிறகு அந்த புத்தர் நம்முடைய கட்டைவிரல் அளவிற்கு இருக்க வேண்டும், மேலும் நம் முன் நம்முடைய கையில் இருந்து ஒரு அடி தூரத்தில் இருக்க வேண்டும். நம்முடைய கண்களால் உருவாக்கப்படவில்லை என்பதால் உண்மையில் அந்தப் பொருளைப் பார்க்காமல், நம்முடைய கண்கள் கீழ்நோக்கிப் பார்க்கின்றன. நாம் கீழே பார்ப்பதால் புத்தர் சற்று மேலே இருக்கிறார் அதாவது நம்முடைய நெற்றி மட்டத்தில் இருக்கிறார். 

இது அவ்வளவு கடினமான காரியமல்ல. தரையை நோக்கிப் பாருங்கள், பின்னர் உங்களுடைய நெற்றிக்கு நேரே கட்டை விரலை நேர்நிறுத்துங்கள். உங்களது கட்டை விரல் அங்கே இருப்பது போன்ற ஒரு உணர்வு வரும், ஆகவே நீங்கள் அங்கு பார்க்காமலே நீங்கள் கட்டைவிரலின் மீது கவனம் செலுத்த முடியும், இல்லையா?அதன் பின்னர் நீங்கள் கைகளை கீழே போட்டாலும் கூட, உங்களுடைய கட்டைவிரல் இருந்த இடத்தில் தொடர்ந்து உங்களால் கவனம் செலுத்த முடியும். மிகவும் எளிமையாக! 

பல தேரவாத பௌத்த பயிற்சிகளில், கண்களை மூடிக்கொண்டிருக்க பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் மஹாயனா புத்தகங்களில் கண்களை திறந்த வைத்திருக்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில தியானப் பயிற்சிகளில் கண்கள் அகல விரிந்தோ அல்லது மூடியோ இருக்க வேண்டும், ஆனால் பொதுவாக மஹாயனாவில், கண்கள் திறந்தே இருக்க வேண்டும், மூடி இருத்தல் கூடாது. நீங்கள் எளிதில் கவனம் திசை திருப்பப்படலாம் என்பதால் நீங்கள் கண்களை முழுவதுமாக திறந்து வைத்திருக்க விரும்பாமல் இருக்கலாம். எனவே நீங்கள் பார்வையை கீழ்நோக்கி உங்களது மூக்கின் நுனி மீது கவனம் செலுத்துங்கள். நமக்கு மாறுகண் வந்துவிட்டது என்பதல்ல இதன் அர்த்தம், நம்முடைய மூக்கின் நுனி மட்டத்தில் தரையைப் பார்க்கிறோம், அதிக அழுத்தமின்றி தளர்வாக கவனம் செலுத்துகிறோம் : தரையில் விழுந்த கான்டாக்ட் லென்ஸை நாம் தேடவில்லை. 

கண்களை மூடி தியானிப்பதில் சில தீமைகளும் இருக்கின்றன. அமைதியாக இருப்பதற்கும், அன்பு மற்றும் இரக்கத்தை மேம்படுத்தவும் நாம் முழுவதும் கண்களை மூடிக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், அன்றாட வாழ்வில் அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது உங்களால் உடனடியாக கண்களை மூடிக்கொண்டு, அந்த மனநிலையை உருவாக்க முயற்சித்தல் என்பது முடியாத காரியம் – அது சற்றே விசித்திரமாகவும் இருக்கக் கூடும். மஹாயனாவில், நாம் நம்முடைய கண்களை சற்றே திறந்து வைத்திருக்க வேண்டும் ஏனெனில் நாம் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் உதவுவதற்காகவே எல்லாவற்றையும் செய்கிறோம்; நாம் அவற்றை மூடி வெளியே அனுப்பக் கூடாது. கண்களை மூடி தியானிப்பதில் இருக்கும் நுணுக்கமான பிரச்னை என புனிதர் தலாய் லாமா சுட்டிக்காட்டுவது யாதெனில், கண் இமைகள் சற்று படபடக்கும் போது சிவப்பு வண்ணப் புள்ளிகள் வட்டமிட்டு நடனமாடுவதையும்  உங்களால் பார்க்க முடியும், இதுவும் கூட கவனச் சிதறலே.

காட்சிப்படுத்துதலின் இரண்டு வகைகள்

நாம் காட்சிப்படுத்தும் போது, நாம் கவனத்தில் கொள்ள இரண்டு முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தோற்றத்தை உருவாக்குதல், பொதுவாக அது “தெளிவு” என மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் அது பெரிய வார்த்தையல்ல ஏனெனில் ஏதோ ஒன்றில் கவனம் செலுத்துவதை இது குறிக்கிறது. இந்த நேரத்தில் விஷயம் அதனைப் பற்றியது அல்ல, நம்முடைய கற்பனையுடன் தோன்றும் ஏதோ ஒன்றைப் பற்றியது. இரண்டாவது காரணி “பெருமை”, அங்கு நாம் உண்மையில் காட்சிப்படுத்தும் ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு பெருமை உணர்வு அடைதல். 

இந்தப் பெருமை, இந்த உணர்வானது, தொடக்கத்தில் மிகவும் முக்கியம் என்று சாங்கப்பா விவரிக்கிறார். நம்முடைய காட்சிப்படுத்துதலில் கவனமாக இருத்தலைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் உண்மையிலேயே நம்முன் புத்தர் இருப்பதாக நாம் உணர்ந்தால், அது மிக நல்லது. நமக்குத் தேவையெல்லாம் ஒரு தோற்றம், ஒரு மஞ்சள் விளக்காக இருந்தாலும் பரவாயில்லை, “ஆம் உண்மையில் அங்கு புத்தர் இருக்கிறார்” என்று சிந்தியுங்கள். நம்முடைய ஒருமுகப்படுத்துதல் மேம்பட்டால் தானாகவே அதன் விவரங்கள் வந்து சேரும். 

அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள்

பயிற்சியாளர்களாக நாம் செய்யும் மிகப்பெரிய தவறு நாம் காட்சிப்படுத்த முயற்சிப்பவை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அதீத விவரங்களான, எந்த மாதிரியான உடை, ஆபரணம், கண்களின் நிறம் என்ன உள்ளிட்டவற்றை சிந்திக்கிறோம். இது நம்மை மேலும் இறுக்கம் அடையச் செய்கிறது, இதனால் நம்மால் தொடர்ந்து பயிற்சிக்க முடியவில்லை. பல வடிவங்கள் குறித்து காட்சிப்படுத்த முயற்சிக்கும் போது இது மேலும் மோசமடைகிறது. புத்தகங்கள் உதவி செய்யாது, ஏனெனில் அவை அது தொடர்பைன நுணுக்கமான விவரங்கள் அனைத்தையும் கொடுக்கும், மேலும் தொடக்கத்தில் இருந்தே அனைத்தையும் காட்சிப்படுத்த முடியும் என்ற எண்ணத்தை அவை தருகின்றன.சிக்கலான பல உருவங்களின் தொகுப்புகள் அனைத்தின் விவரங்களையும் காட்சிப்படுத்த முயற்சிப்பதென்பது நம்பமுடியாத முன்னேற்றம். இறுதியில் நம்மிடம் வியத்தகு திறமை இருந்தால், நம்மால் அனைத்தையும் காட்சிப்படுத்த முடியும், ஆனால் இப்போது அதனை மறக்கக் கூடும். அனைத்து விவரங்களையும் பெற அதிக அழுத்தம் கொடுக்க முயற்சித்தால், பின்னர் திபெத்தித்தில் சொல்வதைப் போல “லூங்” என்று அழைக்கப்படுவதைப் பெறுவோம், அங்கு நம்முடைய சக்தி தொந்தரவடைந்து நாம் வெறுப்படைந்ததாக உணர்வோம்.   

காட்சிப்படுத்துதலை கட்டமைத்தல்

சிக்கலான காட்சிப்படுத்துதல் குறித்து மிக நடைமுறை அறிவுரையை இரண்டு பாரம்பரியங்களைக் குறிப்பிட்டு சாங்கப்பா வழங்குகிறார். அவற்றில் ஒன்று ஒரு நேரத்தில் நுண்ணிய விவரங்கள் மீது செயலாற்றுதல், முழு உருவத்தைப் பெறும் வரை அவற்றை சேர்த்துக்கொண்டே இருத்தல். சில சிறப்பான தனித்துவங்களுக்கு இந்த முறை பொருத்தமானது என்று அவர் கூறி இருக்கிறார். நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு தெளிவற்ற உருவம் அல்லது முழுவதைப் பற்றிய உருவத்தில் இருந்து முதலில் தொடங்குவோம், அதன் பின்னர், அந்த கட்டமைப்பிற்கு, ஒரே நேரத்தில் விவரங்களை நிரப்புவோம். 

இது முக்கியமானது விவரங்களை சேர்க்கும் இந்த முறையானது குவிப்பு போன்றது, அங்கு ஒரு விவரத்திலேயே உங்களது கவனம் கூர்மையாக இருக்கும், பின்னர் முதல் கவனத்தை இழக்காமல் இரண்டாவதைச் சேர்த்தல். அதன் பிறகு நீங்கள் இரண்டின் மீது கூர்மையான கவனம் கொண்டிருப்பீர்கள், அடுத்ததாக முதல் இரண்டை இழக்காமல் மூன்றாவதை சேர்க்க முடியும். நாம் ஏற்கனவே பராமரித்து வைத்திருக்கும் கவனத்துடன் மேலும் சிலவற்றைச் சேர்க்கும் போது கவனம் இழக்காமல் இருப்பதென்பது முக்கியமானது.  

புத்தரை நாம் காட்சிப்படுத்தினால், கண்களில் இருந்து தொடங்குமாறு சாங்கப்பா அறிவுறுத்துகிறார். உடலின் பொது வடிவம் தெளிவாக இருந்தால், நாம் அதைப் பற்றி இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ஒரு வேளை பொதுவான வடிவம் தெளிவின்றியும் ஆனால் சில பாகங்கள் தெளிவாகவும் இருந்தால், எவையெல்லாம் தெளிவாக இருக்கின்றனவோ அவற்றின் மீது நம்முடைய கவனத்தை கொண்டிருக்கலாம். இவற்றில் சில பாகங்கள் அழிந்து போனாலும், ஒட்டு மொத்த பொது உருவத்தின் மாதிரியையும் நாம் மீண்டும் உருவாக்கம் செய்ய வேண்டும். 

விழிப்புணர்வை விரிவாக்கம் செய்யும் ஆயுதம் காட்சிப்படுத்துதல் 

இவை போன்ற சிக்கலான காட்சிப்படுத்தல்கள் அனைத்தின் மையப்புள்ளி என்ன? இது வெறுமனே மனதின் தடகளத் திறன்களை மேம்படுத்துவதல்ல, முடிவில் நாம் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றுவிட்டதைப் போல கற்பனை செய்து கொள்வதற்கு. எல்லா விவரங்களும் நம்முடைய மனதின் விழிப்புணர்வை விரிவாக்கம் செய்யவும் மேலும் ஒரே நேரத்தில் பல விதமான விஷயங்களையும் புரிந்து கொள்ள உதவி செய்யவும் வேண்டும். இங்கு விஷயமே எல்லாம் பார்க்க எப்படி இருக்கிறது என்பதல்ல, மாறாக ஒவ்வொரு விவரமும் என்ன குறிக்கிறது என்பதே முக்கியம். 

புத்தராவதற்கான பல்வேறு சாதாரண பயிற்சிகளை கருத்தில் கொள்ளுங்கள்: 32 முக்கியமான பயிற்சிகள் உள்ளன. நம்முடைய மனதை தொடர்ச்சியான இது போன்ற 32 வெவ்வேறு பயிற்சிகளில் செலுத்துவதென்பது மிகக் கடினமாகும், குறிப்பாக நாம் அதனை முற்றிலும் பலனளிக்காத வழியில் செய்தால் மிகக் கடினம். இந்த 32-ஐயும் வரைபட வடிவத்தில் புத்தர் உடலின் 32 சிறந்த குறியீடுகள் என்று குறிப்பிட்டுக் காட்டினால், அதாவது கடிகார சுழற்சியில் முடி சுருள்வதைப் போல இருந்தாலும் அனைத்தையும் ஒருசேர இணைப்பது எளிது, நாம் கொண்டிருக்கும் நோக்கமும் அதுவே. 

ஒவ்வொரு தனிப்பட்ட உணர்தல்களையும் ஒரே நேரத்தில் உருவாக்க முடியாவிட்டால், அவை அனைத்தையும் எவ்வாறு ஒன்றாக இணைக்க முடியும். எல்லா உயிரினங்களும் பலனடைய வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம், அப்படியானால் ஒரே நேரத்தில் அனைத்தைப் பற்றியும் விழிப்புடன் இருத்தல். இதற்கு நம்முடைய விழிப்புணர்வை மெல்ல மெல்ல வளர்ச்சியடையச் செய்யும் வகையில் மனதை விரிவாக்கம் செய்ய வேண்டும். இது போன்ற கடினமான காட்சிப்படுத்தல்கள் இதனைச் செய்ய நமக்கு உதவி செய்யும்.

சுருக்கம்

எதாவது ஒன்றில் நாம் உண்மையில் ஆர்வமாக இருந்தால் நாம் சோம்பேறியாக இருக்க மாட்டோம், ஆனால் நமக்கு ஓய்வு கிடைத்தற்கு பிறகு வரை என அதனை தள்ளி வையுங்கள்; நமக்கு எப்போது ஓய்வு தேவை என்பதை அறிந்து கொள்வது உண்மையில் முக்கியம், அப்போது தான் நாம் முழு சக்தியையும் இழக்காமல் முழுவதும் கைவிடாமல் இருப்போம். ஒரு முறை போதனைகளைக் கற்றல், ஆராய்தல் மற்றும் அது குறித்து தியானித்தலால் ஏற்படும் பலன்களை நாம் உண்மையில் பார்க்கத் தொடங்கினால், வீரியம், அதன் ஆதரவுடன் கிடைக்கும் விடாமுயற்சி மற்றும் மகிழ்ச்சி மெல்ல வரும். எல்லாவற்றிற்கும் மேலாக பௌத்த காட்சிப்படுத்தல் முறைகள் நமது ஒருமுகப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வை நம்பமுடியாத அளவிற்கு செம்மைப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். இதன் முக்கிய அம்சம், நாம் அதை படிப்படியாக எடுக்க வேண்டும் என்பதை அறிவது, மேலும் காலப்போக்கில் நாம் தொடர்ந்தால், நமக்காகவும் மற்ற அனைவருக்கும் உதவுவதற்காகவும் நாம் மிகவும் நன்மை பயக்கும் மனநிலையை அடைய முடியும்.

Top