முன் அறிமுகம்
இந்த கட்டுரையானது எட்டு வசனங்களாக கெஷே லங்ரி தங்பாவால் (லாங்தங்பா) தொகுக்கப்பட்டுள்ளது. இந்த போதனைகள் கடம் குருக்களின் அடிபற்றி தொடங்குகிறது. மஞ்சுஸ்ரீயின் அவதாரமான கெஷே பொடாவா, அதை கெஷே ஷராவாவுக்கும் பின்னர் கெஷே லாங்ரி தங்பாவுக்கும் வழங்கினார். இந்த இருவரும் கடம் சீடர்களின் சூரியன் மற்றும் சந்திரன் என்று அழைக்கப்படுகிறார்கள்.
சீடர்கள் மீது நம்பிக்கையை வளர்க்கவும், போதனையின் சரியான ஆதாரத்தைக் காட்டவும் ஆசிரியரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றை விளக்குவது பாரம்பரியமாக இருக்கும் வழக்கம், ஆனால் முழு கதையையும் விவரிக்க இப்போது நேரமில்லை.
இந்த போதனை பற்றி தேடிய ஒரு நபர் கெஷே செகாவா, அவர் மனப்பயிற்சியின் ஏழு புள்ளிகள் என்கிற நூலின் ஆசிரியர். ஒரு குக்கிராமதில் வேறொரு கடம்பா கெஷேவை பார்க்கச் சென்றிருந்தவர் “உன்னுடைய பலன்களை மற்றவர்களுக்கு கொடு அவர்களின் சாபங்களை நீ எடுத்துக் கொள்” என்று அங்கே எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தை பார்த்திருக்கிறார். இவ்வளவு காலத்தை வீணடித்துவிட்டதாக அவரது மனதில் இந்த வாசகம் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தார். அந்த வாசகத்திற்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டு, அதை எழுதிய கெஷே லாங்தங்பாவைப் பார்க்க பென்போ மாவட்டத்திற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது, கெஷே லாங்தங்பா உயிருடன் இல்லை என்பதால், செகாவாவால் அதன் பொருளை கேட்டு அறிந்துகொள்ள முடியவில்லை. அங்குள்ள மடத்தின் சூழ்நிலை திருப்தியாக இல்லாததால், அவர் வேறு இடத்திற்குச் சென்றார்.
அதன் பின்னர் அவர், ஹினாயனா நூலில் இருந்து மனதின் நிலைகள் ஷ்ரவகபூமி – ஷ்ரவகா (கவனிப்பவர்) பற்றி சொற்பொழிவு வழங்கும் கெஷே ஷராவாவின் மடத்திற்கு சென்றார். அந்த சொற்பொழிவு அவருக்கு உற்சாகத்தை தரவில்லை. அவர் மஹாயனா வார்த்தைகளை கேட்கலாம் என்ற நம்பிக்கையோடு அங்கு சென்றிருந்தார், ஆனால் அவரால் எதையும் கேட்கமுடியவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்தார். சொற்பொழிவுக்குப் பிறகு, கேஷே ஷராவா மடாலயத்தைச் சுற்றி வரச் சென்றார், அப்போது செகாவா அவரைச் சந்திக்கச் சென்றார். அவர் தனது துறவி மெத்தை உறையை எடுத்துச் சென்று, அதை ஒரு மேடையில் வைத்து, ஷராவாவை நிறுத்தி அவருக்கு அதே இடத்தில் கற்பிக்கச் சொன்னார். “சொற்பொழிவின் போது என் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தபோது என் சீடர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தேன். என்னை ஏன் இது போன்ற ஒரு இடத்தில் நிறுத்தி போதிக்கச் சொல்கிறாய்?” என்று ஷராவா கேட்டார். தன்னை மிகவும் கவர்ந்த போதனையைப் பற்றி விளக்கிய செகாவா, அதைப் பற்றி மேலும் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புவதாகக் கூறினார். ஷராவா தனது மந்திரத்தை ஓதுவதை நிறுத்திவிட்டு, தனது மணிக்கட்டில் ஜெபமாலையைச் சுற்றிக் கொண்டு, "இந்த போதனையால் நீங்கள் ஈர்க்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஞானம் பெறுவதற்கான ஒரே வழி இதுதான்" என்று கூறினார். "சொற்பொழிவின் போது நீங்கள் ஏன் எந்த மகாயனா வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை?" என்று செகாவா கேட்டார், "பயிற்சிக்கு கொண்டு வரப்படாதவர்களிடம் என் வார்த்தைகளை வீணாக்குவதால் என்ன பயன்?" என்று ஷராவா அதற்கு பதிலளித்தார்.
இந்த நேர்காணலால் செகாவா ஈர்க்கப்பட்டாலும், இந்த போதனைகள் குறித்த ஆதாரங்களை அவர் தொடர்ந்து தேடிக்கொண்டும், விசாரித்துக்கொண்டும் இருந்தார். அது எங்கிருந்து தோன்றியது என்பதை தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். "நாகார்ஜுனனை அனைத்து மகாயானிகளும் தங்கள் பாரம்பரியத்தின் முன்னோடியாக அங்கீகரிக்கின்றனர். அவர்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த போதனையானது ரத்னாவளியின் (விலைமதிப்பற்ற மாலை) முடிவில் 'தன் மீது தோல்வியை ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு வெற்றியைக் கொடு' என்ற நாகார்ஜுனனின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டது" என்று ஷராவா கூறினார். பின்னர் செகாவா சாஷ்டாங்கமாக வணங்கி, "தயவுசெய்து அதைப் பற்றிய போதனைகளை எனக்குக் கொடுங்கள்" என்று கூறினார். அதை ஏற்றுக் கொண்டார் ஷராவா. வீட்டிற்குச் சென்ற செகாவா ரத்னாவளியைப் படித்து, ஷராவா கூறிய அதே வசனத்தைக் கண்டார். பதினான்கு ஆண்டுகள் ஷராவாவுடன் கழித்த செகாவா, ஒரு சிறந்த போதிசத்துவரானார், அவர் எப்போதும் சுடுகாடுகளில் தியானம் செய்தார் – அது சடலங்களை வெட்டி கழுகுகளுக்கு உணவளிக்கும் இடங்கள்.
எட்டு வசனங்கள்
அணுகுமுறை பயிற்சி (லோஜோங், மனப் பயிற்சி) நம்மை மேம்படுத்திக் கொள்ள ஊக்குவிப்பதால் உதவியாக இருக்கும். அதிஷா, அணுகுமுறை பயிற்சியைப் பாராட்டி, "மனப்பான்மை பயிற்சியைப் பின்பற்றுவதும் அனைத்து மரபுகளையும் மதிப்பதும், பிரிவினையற்றவராக இருப்பதும், அனைத்து மரபுகளிலிருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வதும் - உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்" என்று கூறினார். நாம் ஞானம் பெற விரும்பினால், பயிற்சியின் இந்த எட்டு புள்ளிகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும், இல்லையெனில் நாம் அதை இழந்து போவோம்.
(1) உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காக, விரும்பியதைத் தரும் ரத்தினங்களை விட, வரையறுக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் எவ்வளவு உயர்ந்தவை என்பதைக் கருத்தில் கொண்டு, நான் எப்போதும் அவற்றைப் போற்றுவேன்.
விருப்பங்களை நிறைவேற்றும் ரத்தினங்களால் இந்த ஜென்மத்தில் மட்டுமே விருப்பங்களை நிறைவேற்ற முடியும், ஆனால் வரையறைக்குட்பட்ட உயிரினங்களை (உணர்வுள்ள உயிரினங்களை) போற்றுவது இந்த ஜென்மத்திலும் அடுத்த ஜென்மத்திலும் நன்மைகளைத் தருகிறது. மற்ற அனைத்து வரையறைக்குட்பட்ட உயிரினங்களையும் போற்றுவதன் மூலம், நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் இறுதி நன்மையை அடைய முடியும், அதாவது ஞானத்தை அடைய முடியும்.
நீங்கள் ஞானம் அடைவது என்பது வரையறைக்குட்பட்ட உயிரினங்களின் கருணை மற்றும் குருக்களின் கருணை என்ற இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டும் சமமானவை. "மக்களின் மனப்பான்மை மிகவும் மோசமானது. அவர்கள் வரையறைக்குட்பட்ட உயிரினங்களைப் புறக்கணித்து, குருக்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இரண்டின் மீது செலுத்தும் கருணையும் ஒன்றுதான்" என ஒரு குரு கூறினார். "தர்மத்தை பின்பற்றும் நாம், முக்கியமானவர்களை நேசிக்கும் மற்றும் முக்கியமற்றவர்களை புறக்கணிக்கும் சாதாரண மக்களுக்கு நேர்மாறாக செயல்பட வேண்டும். எனவே புத்தர்களை விட வரையறைக்குட்பட்ட உயிரினங்களை நாம் அதிகமாகப் போற்ற வேண்டும்" என்று கெஷே செங்காவா கூறினார்.
(2) எப்போதெல்லாம் யாராவது ஒருவரின் ஒத்துழைப்புடன் நான் வருகிறேனோ அப்போதெல்லாம், என்னுடைய ஆழ் மனதில் மற்றவரை உயர்வாகவும் என்னை தாழ்வாகவும் கருதுவேன்.
இந்த மனப்பான்மை நம்மிடம் இருந்தால், அது தானாகவே மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதையும், குறைத்து மதிப்பிடுவதையும் நிறுத்திவிடும். அவர்களின் நல்ல குணங்களை நினைவில் கொள்வதன் மூலம், நாம் சந்திக்கும் அனைவரிடமும் கருணையுடன் கூடிய நேர்மறையான அணுகுமுறையை உருவாக்க முடியும். கடம் குருக்கள் உண்மையில் இந்தப் போதனைகளை நடைமுறைப்படுத்துகிறார்கள்:
ஒருமுறை ட்ரோம் (ட்ரோம்டன்பா) ஒரு மடாலயத்திற்குச் சென்றார், அங்கு அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. வழியில், பூஜையிலிருந்து வந்த ஒருவரைச் சந்தித்தார், அவர் தனது சொந்த காலணிகளை எடுத்துச் செல்ல முடியாத ஒரு சோம்பேறியாக இருந்தார்.அவரால் ட்ரோமை அடையாளம் காண முடியவில்லை, ஏனெனில் அவர் மோசமான உடையணிந்திருந்தார். எனவே அவர் ட்ரோமை தனது காலணிகளை எடுத்துச் செல்லும்படி கேட்டார். மகிழ்ச்சியோடு வரவேற்று, "நிச்சயமாக" என்று கூறி அவரின் காலணிகளை இரு கைகளாலும் எடுத்து தனது தோள்களில் வைத்தார். அதன் பின்னர் ஒரு பெரிய ஊர்வலத்துடன் மடாலயத்தில் ட்ரோம் அமர்ந்திருந்தார். தனது காலணிகளை எடுத்துச் செல்லும்படி கேட்ட நபரே மடாலயத்தில் ட்ரோமாக அமர்ந்திருக்கிறார் என்பதைப் பார்த்து மிகவும் வெட்கப்பட்டு, அவரை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து ஓடினார் அந்த நபர்.
ஒரு காலத்தில் எப்போதும் தர்மத்தை பற்றியே பேசிக் கொண்டிருந்த ஒருவர் இருந்தார். ட்ரோம் அவரைக் கடந்து சென்றபோது, அந்த மனிதன், "ஏய், நீ! என்னை வணங்கு, நான் உனக்குக் கற்றுக்கொடுக்கிறேன்" என்று கூப்பிட்டார். ட்ரோம் அப்படியே வணங்கி, அவரது தர்மப் பேச்சைக் கேட்டார். ட்ரோம் பணிவுடன் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தார், இறுதியில் ட்ரோம் அந்த மனிதனை விட அதிகமாக விளக்கினார். அந்த மனிதனுக்கு சந்தேகம் வந்து, "ஒருவேளை நீ ட்ரோமாக இருக்கலாம்" என்று கேட்டார். அதற்கு ட்ரோம், "அவர்களும் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள்" என்று அமைதியோடு சொன்னார்.
நம்முடைய குணங்களை மற்றவர்கள் அறியவில்லையே என்று நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். நாம் பேசுவதற்கு முன்பு, நம் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை தயாரித்து, மற்றவர்களுக்குக் காட்டுகிறோம். ட்ரோம் ஒருபோதும் ஆடம்பரமாக இருந்ததில்லை. அவருக்குள் ஏராளமான சாதனைகள் இருந்தன, ஆனால் வெளியே மிகவும் சாதாரணமாக இருந்தார். "குறைவான பதவிகள் மகிழ்ச்சியின் நகரம்; உயர்ந்த பதவிகள் மகிழ்ச்சியில்லா நகரம்" என்ற இந்த விதியின்படி ட்ரோம் பயிற்சி செய்தார்.
(3) நான் என்ன செய்தாலும், என்னுடைய மன ஓட்டத்தை நான் கவனிப்பேன், சிக்கலான அல்லது தொல்லை தரும் உணர்வுகள் எழும் நேரத்தில், அது என்னையும் மற்றவர்களையும் பலவீனப்படுத்துவதால், அவற்றை நான் பலவந்தமான முறையில் எதிர்கொண்டு தடுக்கிறேன்.
நீங்கள் என்ன செய்தாலும் - உட்கார்ந்திருந்தாலும், நடந்தாலும், அல்லது தூங்கினாலும் - உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். எப்போதும் மற்றவர்களை சோதித்து கொண்டு இருக்காதீர்கள். உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். ஒரு உண்மையான தர்மவாதியின் வேலை, தங்களைத் தாங்களே சோதித்துப் பார்ப்பது, மற்றவர்களை சோதிப்பது அல்ல. ஆனால் நாம் மற்றவர்களைப் பற்றி துப்பறிவதையே தொழிலாக வைத்துள்ள நபர்கள். நாம் எப்போதும் மற்றவர்களிடம் தவறுகளைக் காண்கிறோம். நாம் நமது சொந்த மாயைகளைப் பார்ப்பதில்லை. நாம் வைத்திருக்கும் ஒரு டார்ச் லைட் எப்போதும் நம்மை காட்டாமல் மற்றவர்களை மட்டுமே காட்டும் ஒரு மாயையில் சிக்கி இருக்கிறோம். "மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிக்க நாம் அதிகம் தேடுகிறோம், ஆனால் நம்முடைய தவறுகளுக்கு மிகக் குறைந்த கவனம் செலுத்துகிறோம், மற்றவர்களை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு" என்று எட்டாவது தலாய் லாமா கூறி இருக்கிறார். நம் அண்டை வீட்டார் சண்டையிடும் போது, அதைப் பார்த்துவிட்டு, மற்றவர்களிடம் அதைப் பற்றிப் பேசினால், நாம் சொல்லும் விஷயத்தால் யாருக்கும் எந்த உதவியும் இருக்காது. இப்போது டார்ச்சை நம் மீது திருப்பி, நாம் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காணத் தொடங்க வேண்டிய நேரம்.
நமக்குத் தொந்தரவு தரும் உணர்ச்சிகள் எழும்போது தர்மம் தேவைப்படுகிறது. அது அவற்றின் எதிரி. நமக்கு தொந்தரவு தரும் உணர்ச்சிகள் இருக்கும்போது தர்மத்தைப் பயன்படுத்தாவிட்டால், வேறு எப்போது அதைப் பயன்படுத்துவோம்? "நீங்கள் தோற்றத்தில் மட்டும் ஒரு தர்மவாதியாக இருக்கக்கூடாது, நல்ல சூழலில் சிறந்தவராக செயல்பட்டுவிட்டு, மோசமான சூழ்நிலைகளில் ஒரு சாதாரண மனிதனை விட மோசமாகச் செயல்படும் ஒரு நபரைப் போல நீங்கள் இருக்கக் கூடாது" என்று குங்டாங் ரின்போச் கூறி இருக்கிறார்.
(4) எதிர்மறைகளாலும் கடுமையான பிரச்னைகளாலும் ஆட்கொள்ளப்பட்ட, இவர்கள் கொடூரமானவர்கள் என்கிற உள்ளுணர்வை நான் காணும் போதெல்லாம், கண்டுபிடிக்க முடியாத ரத்தினப் புதையலைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல அவர்களை போற்றுவேன்.
ஒருவருக்கு உதவுவது ஒரு அரிய வாய்ப்பு, எனவே நாம் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது, மாறாக அந்த வாய்ப்பை ஒரு பொக்கிஷம் போலப் போற்ற வேண்டும். கொடுப்பதனையும், பொறுமையாக கையாளுவதையும் அடைக்கலம் வழங்குவதை போலவே கருதப்பட வேண்டும்.
(5) பொறாமை காரணமாக மற்றவர்கள் என்னைத் திட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற நியாயமற்ற முறையில் நடத்தும்போது, அதனால் ஏற்படும் வலியையும் இழப்பையும் நானே ஏற்றுக் கொண்டு வெற்றியை அதாவது மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு வழங்குவேன்.
பிறருக்கு கொடுப்பதை விட பொறுமை மிகவும் அரிதானது. உலகில் ஏராளமான யாசகர்கள் இருக்கிறார்கள்; ஆனால் அவர் உங்களுக்கு ஏதேனும் தீங்கு செய்து உங்களுடைய பொறுமையை சோதிப்பவராக மாறுகிறார் என்றால், முதலில் நீங்கள் அவருக்கு ஏதேனும் தீங்கு செய்திருக்க வேண்டும். எனவே ஒருவர் பொறுமையின் பொருளாக இருக்க முன்வரும்போது, பிறருடன் பொறுமையாக இருக்கும் வாய்ப்பை இழக்காதீர்கள். போதிசத்வ நடத்தையில் ஈடுபடுவதில் சாந்திதேவா அறிவுறுத்தியது போல்:
(VI.106) இந்த வாழ்க்கையில் ஏராளமான யாசகர்கள் உள்ளனர், ஆனால் (எனக்கு) தீங்கு விளைவிப்பவர்கள் மிகக் குறைவு, ஏனென்றால் நான் (கடந்த காலங்களில்) அவர்களுக்கு இதுபோன்று தீங்கு செய்யாவிட்டால் யாரும் எனக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள்.
(VI.107) ஆகையால், என் வீட்டில் ஒரு புதையல் கிடைத்ததைப் போல தோன்றிய ஒரு எதிரியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைவேன், அவரை சோர்வுடன் அணுக வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவர் என்னுடைய போதிசத்துவ நடத்தைக்கு உதவும் உதவியாளராகிறார்.
எனவே விமர்சனங்கள் வரும் போது பொறுமையிழந்து விடாதீர்கள். விமர்சனங்கள் நம்முடைய சொந்தத் தவறுகளைக் காண உதவுகிறது. நாம் எப்போதும் பாராட்டப்பட்டால், நம் தவறுகள் மறைக்கப்படும், பின்னர் நாம் பெருமையை வளர்த்துக் கொள்ளலாம். விமர்சனம் நாம் என்ன தவறு செய்தோம் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது, பின்னர் நீங்கள் செய்த தவறுகளை நீங்களே சரிசெய்யலாம்.
"மகாயான போதனைகளில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்து தவறுகளும் என்னுடையவை, மேலும் அதில் உள்ள அனைத்து நல்ல குணங்களும் மற்றவர்களுக்கு சொந்தமானவை" என்று கெஷே லாங்தங்பா வேறொரு படைப்பில் கூறி உள்ளார். இது சுயத்தை மற்றவர்களுக்கு பரிமாறிக் கொள்ளும் நடைமுறையைப் பற்றிய அவரது முழுமையான புரிதலைக் காட்டுகிறது என்று பிற்கால குருமார்கள் கூறி உள்ளனர்.
போதிசத்வர்கள் பாராட்டு மற்றும் விமர்சனம் இரண்டையும் எதிரொலிகளைப் போலவே நடத்துகிறார்கள் என்று கடம் குருமார்கள் கூறினர். பாராட்டப்பட்டால், மற்றவர்கள் தங்களைக் குறை கூறுவது போல, நேர்மாறாக அவர்கள் உணர்கிறார்கள். இதனால் போதிசத்துவர்கள் மிகவும் நிலையானவர்கள் மற்றும் சமமான வாழ்க்கையை நடத்துகிறார்கள் - பாராட்டப்பட்டால் அதிகம் மகிழ்ச்சியடைய மாட்டார்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டால் மனச்சோர்வடைய மாட்டார்கள். அதனால்தான் அணுகுமுறை பயிற்சி "விடுதலையின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது.
(6) நான் உதவி செய்த, அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட ஒருவர் எனக்கு முற்றிலும் தவறாகத் தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும், அவரை ஒரு புனிதமான ஆசிரியராக நான் பார்க்கலாமா?
நீங்கள் கருணையோடு நடந்து கொண்ட ஒரு நபர் பதிலுக்கு உங்களிடம் மோசமாக நடந்து கொண்டால், அவர்கள் விளைவுகள் மற்றும் பாதிப்புகளை உங்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர்கள். கடந்த காலத்தில் நாம் அவருக்கு தவறு இழைத்துள்ளோம், எனவே அவர் நம்முடன் மோசமாக நடந்து கொள்வதற்கான காரணம் கடந்த கால அழிவான செயல்களின் விளைவு என்பதை உணர வேண்டும். எனவே நாம் எப்போதும் காரணம் மற்றும் விளைவுக்குள் இடையே இருக்கும் தொடர்பை புரிந்து கொள்ள உறுதியேற்க வேண்டும். நமது செயல்களுக்கு மக்கள் என்ன எதிர்வினையாற்றினாலும், நாம் சோர்வடையவோ கோபப்படவோ மாட்டோம் என்றும்; மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக நன்மை செய்வோம் என்றும் உறுதியேற்க வேண்டும். ஏதாவது நடக்கும்போது, இந்த ஜென்மத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். இதற்கு தகுதியானவர்களாக நாம் இப்போது என்ன செய்திருக்கிறோம் என்பதை மட்டுமல்ல, கடந்த காலத்தில் இதைச் சாதிக்க நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் ஆராயுங்கள். கடந்த காலத்தில் நாம் செய்த அனைத்து எதிர்மறையான காரியங்களுக்கும் விளைவுகள் மோசமாக இல்லை என்பதற்கு நன்றியுடன் இருங்கள்.
கடந்த காலத்தில் நாம் செய்த அழிவுகரமான செயல்களால் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று குருக்கள் கூறியுள்ளனர். மேலும், வேறு யாராவது கடந்த காலத்தில் கெட்டவர்களாக இருந்து இப்போது முன்னேறியிருந்தால், அவர்களின் எதிர்மறை செயல்களைப் பற்றி நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், அது தர்மத்தின் மீதும் அதன் முன்னேற்ற சக்தியின் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. எனவே கடந்த காலத்தின் அடிப்படையில் இல்லாமல், நிகழ்காலத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டாம்.
நீங்கள் செய்யும் எந்த நன்மையையும், அதற்கு ஈடாக ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் உந்துதலுடன் செய்யக்கூடாது. சுயநலத்தின் தவறுகளைப் பற்றி நமக்குக் கற்பிக்கும் குருக்களாக இந்த மக்களைக் கருதுங்கள், நாம் செய்யும் நன்மைக்கு நேர்மறையான பதில் கிடைக்காதபோது நாம் எப்படி உணர்கிறோம் என்பது பற்றிய நமது சுயநல இயல்பை இது வெளிப்படுத்துகிறது. கூர்மையான ஆயுதங்களின் சக்கரத்தில் கூறப்பட்டுள்ளபடி, உங்கள் சொந்த இயல்பை ஆராய்ந்து, சுயநலமற்ற முறையில் தொடர்ந்து பயிற்சி செய்வதற்கான தைரியத்தை வளர்த்துக் கொள்ள இவற்றை போதனைகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கடம் குருக்கள் கூறுகையில், மக்கள் உங்கள் குருக்களாக இருக்க பல வழிகள் உள்ளன என்று கடம் குருக்கள் கூறுகின்றனர். அவர்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை அல்லது ஒரு மடத்தில் அங்கி அணிந்த துறவியாகக் கூட இருக்க வேண்டியதில்லை. நோய் மற்றும் பாதகமான சூழ்நிலைகள் கூட நம்முடைய குருக்களே, துன்பத்தை நாம் விரும்பவில்லை என்றால் நாம் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்ய வேண்டும் என்று அவை நமக்குக் கற்பிக்கின்றன.
(7) சுருக்கமாக, என் எல்லா தாய்மார்களுக்கும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரண்டில் எது நன்மை பயக்கும் மற்றும் மகிழ்ச்சியைத் தருமோ அனைத்தையும் நான் வழங்குகிறேன்; என் தாய்மார்களின் அனைத்து துன்பங்களையும் துயரங்களையும் நான் மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறேன்.
இது போதிசத்துவர்களின் கொடுப்பது, வாங்குவது (தாங்கல்) மற்றும் சுயத்தை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ளும் சிறந்த நடைமுறைகளைக் குறிக்கிறது. நாம் எந்தப் பயிற்சியைச் செய்தாலும், அது வெளித்தோற்றத்திற்காக இருக்கக்கூடாது. இரக்கத்துடன் செய்கிறேன் என்கிற இதயப்பூர்வமான நோக்கத்துடன் அதை உண்மையாகச் செய்ய வேண்டும். உதாரணமாக, மற்றவர்கள் உங்களை இரக்கமுள்ளவர் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக ஒரு யாசகருக்கு உணவு கொடுக்காதீர்கள்.
இது வரை நாம் பார்த்தவை வழக்கமான போதிசிட்டாவின் அடிப்படையில் அணுகுமுறை-பயிற்சியை உள்ளடக்கியது. அடுத்த வசனம் ஆழமான போதிசிட்டா அடிப்படையிலான அணுகுமுறை-பயிற்சியைப் பற்றியது. முதலில் வழக்கமான போதிசிட்டாவையும் பின்னர் ஆழமான போதிசிட்டாவையும் பின்பற்றுவது மந்தமான புத்தியைக் கொண்ட நம்மைப் போன்றவர்களுக்கு ஏற்றது. கூர்மையான புத்திசாலித்தனம் உள்ளவர்களுக்கு மட்டுமே முதலில் ஆழமான போதிசிட்டாவை கற்பிக்க முடியும்.
(8) கடந்து செல்லும் எட்டு விஷயங்களைப் பற்றிய கருத்துக்களின் கறைபடாத மனதின் மூலம், எல்லா நிகழ்வுகளையும் ஒரு மாயையாக அறிந்த மனதின் மூலம், எந்தப் பற்றின்மையும் இல்லாமல், எனது அடிமைத்தனத்திலிருந்து நான் விடுபடுவேன்.
முந்தைய வசனங்களின் நடைமுறைகளை, வாழ்க்கையின் எட்டு நிலையற்ற விஷயங்களுக்கான கவலையுடன் மேலோட்டமாக ஒருபோதும் மேற்கொள்ளப்படக்கூடாது. இது முதிர்ச்சியின்மையின் அறிகுறியாக விவரிக்கப்படுகிறது, இது குழந்தைகளின் நடத்தையாகும்.
நாகார்ஜுனாவின் நண்பருக்கு எழுதிய கடிதம் (சுஹ்ர்லேகா) வாழ்க்கையில் எட்டு நிலையற்ற விஷயங்களான - லாபங்கள் அல்லது இழப்புகள், விஷயங்கள் நன்றாகவோ அல்லது மோசமாகவோ நடக்கின்றன, பாராட்டு அல்லது விமர்சனம், மற்றும் நல்ல அல்லது கெட்ட செய்திகளைக் கேட்பது உள்ளிட்டவற்றை பட்டியலிடுகிறது. வாழ்க்கையில் எட்டு நிலையற்ற விஷயங்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கலாம். அவற்றில் மூன்று நிலைகள் உள்ளன – கருப்பு (சோகம்), வெள்ளை (மகிழ்ச்சி) மற்றும் இரண்டின் கலவை. இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியின் மீதான பற்றுதலால் இந்த உணர்வுகள் எழும்போது அது கருப்பு, சுய-போற்றுதல் மனப்பான்மை, உண்மையிலேயே இருக்கும் நான் என்பதைப் பற்றிக் கொள்வதன் மூலம் எழுகிறது. அத்தகைய எந்த பற்றுதலும் இல்லாமல் அவை எழும்போது அது கருப்பு வெள்ளையின் கலவையாகிறது, இருப்பினும் இரண்டாவது இரண்டு உந்துதல்களுடன் அது அவ்வாறு தோன்றுகிறது. இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியின் மீது பற்றுதல் இல்லாமல் அல்லது சுய-போற்றுதுல் இன்றி அவை எழும்போது, உண்மையிலேயே இருக்கும் நான் என்பதைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே அது வெண்மையானது.
இந்த எட்டு விஷயங்களில் ஏதேனும் ஒன்றை நாம் பெற்றவராக இருந்தாலும் சரி, பெறுபவராக இருந்தாலும் சரி, நாம் வழக்கமாக அதிகமாக எதிர்வினையாற்றி சமநிலையை இழந்து, உற்சாகத்தை இழந்து, மனச்சோர்வடைந்தவராக அல்லது சங்கடமாக மாறுகிறோம். வாழ்க்கையில் எட்டு நிலையற்ற விஷயங்களைக் கைவிடுவது என்பது, இந்த எட்டு விஷயங்களுக்கான கவலையைக் கைவிடுவதாகும், நம் பெற்றோர், மனைவி, குழந்தைகள், வீடு போன்றவற்றைக் கைவிடுவதாகாது. இது நமது அன்றாட வாழ்க்கையிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் தப்பிக்க முயற்சிப்பது பற்றியது அல்ல. சமமான சுவை கொண்ட ஆறு கோளங்களின் ட்ரக்பா காக்யு மரபில் இந்த எதிர் உணர்வுகளை சமப்படுத்துவது மற்றும் சமநிலைப்படுத்துவது பற்றிய போதனைகள் உள்ளன.
ஒருமுறை மிலரேபா, ஒரு குகையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு கசிவு இருப்பதைக் கண்டார், அதனால் அவர் துளைகளை அடைத்து குகையை அழகாக மாற்ற முயன்றார். அதன் பின்னரே வாழ்க்கையில் எட்டு நிலையற்ற விஷயங்கள் குறித்த கவலை குகைக்குள்ளும் தன்னைப் பின்தொடர்ந்ததை அவர் உணர்ந்தார்.
ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டது, அதற்கு என்ன செய்வது என்று கண்டுபிடிக்க குழந்தையின் தாயார் ஒரு ஜோதிடரை அணுகினார். அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி, அதை ஒரு லாமாவிடம் கொண்டு சென்று அந்தக் குழந்தையை அவருடையது என ஒப்படைப்பதுதான் என்று அவர் கூறினார். ஆயிரக்கணக்கான சீடர்களுக்கு கெஷே லாங்தபா சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது, அந்தத் தாய் தன் குழந்தையை கெஷே லாங்தங்பாவிடம் கொடுத்து, "இதோ, இது உங்களுடையது" என்றார். அவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, "என் வாழ்நாள் முழுவதும், நீ என் குழந்தை" என்றார். அவருடைய சீடர்களில் பாதி பேர் அவர் மீது நம்பிக்கை இழந்து, அவர் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்ததாக நினைத்தார்கள். மீதமுள்ளவர்கள் அப்படியே இருந்தனர். சொற்பொழிவின் முடிவில், அந்தப் பெண் காணிக்கைகளைச் செலுத்தி மன்னிப்பு கேட்டார், அவர் குழந்தையை அவளிடம் திருப்பிக் கொடுத்தார். அவருக்கு முழுமையான சமநிலை இருந்தது. அவருடைய சீடர்களில் பாதி பேரின் நம்பிக்கை அப்படியே இருந்தது – இதுவே முழுமையான சமநிலை. அதுவே நாமாக இருந்தால் இதை தாங்கிக் கொள்ள முடியாமல்; அந்த விஷயத்தை பெரிதாக்கி, நாம் நிரபராதிகள் என்று நிரூபிக்க முயற்சித்திருப்போம். ஆனால் கெஷே லாங்தங்பாவுக்கு இந்த சம்பவம் எந்த வேறுபாட்டையும் கொடுக்கவில்லை. நாம் உள்ளுக்குள் தூய்மையைப் பேணினால், நாம் தூய்மையானவர்கள் என்று வெளிப்புறமாக மக்களை நம்ப வைக்க வேண்டியதில்லை - போலியான முறையில் புனிதமாக நடந்து கொள்வது, உலகத்திலிருந்து நம்மை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதைப் போன்றதாகும்.
இந்தப் போதனைகளைப் பின்பற்ற பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
அனைத்து சூத்திர மற்றும் தந்திர போதனைகளின் உள்ளடக்கங்களும் (அ) வரையறுக்கப்பட்ட உயிரினங்களுக்கு நன்மை பயக்கும் அல்லது (ஆ) மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்துவதற்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதைச் செய்ய பொறுமையின் பயிற்சி தேவை. நாம் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், மற்றவர்கள் நமக்கு செய்யும் தீங்கைத் திருப்பி அவர்களுக்கு செய்ய வேண்டும் என்று உணர்கிறோம், இதனால் நாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியாது. நாம் மற்றவர்களைத் திருப்பித் துன்புறுத்தும்போது, அது எப்படி தொடங்கியது என்பதை நாம் மறந்துவிடலாம் - அது முடிவில்லா பழிவாங்கும் சுழற்சியாக மாறும். பழிவாங்கும் சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி, ஒருவரிடமிருந்து நமக்கு தீங்கு ஏற்படும்போது அதை அங்கேயே முடிவுக்குக் கொண்டுவருவதாகும். எனவே, பாரம்பரிய வாய்மொழி போதனைகளில் கொடுக்கப்பட்டுள்ள பொறுமையைப் பயிற்சிகளான இலக்கு போன்ற பொறுமை, அன்பு மற்றும் இரக்கம் பொறுமை, ஆசிரியர் மற்றும் சீடர் பொறுமை மற்றும் வெற்றிடப் பொறுமையின் கோளம் போன்ற நான்கு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
இலக்கு போன்ற பொறுமை
தீங்கு, விமர்சனம் போன்றவற்றுக்கு நாம் இலக்காகும்போது, அது கடந்த காலத்தில் நமது அழிவுகரமான செயல்களால் ஏற்படுகிறது. கடந்தகால வாழ்க்கையில் அழிவுகரமான செயல்களுக்கு நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து இருக்கவில்லை என்றால், இந்த வாழ்க்கையில் யாரும் அதை எதிர்நோக்க மாட்டார்கள். எனவே, நாம் விமர்சனத்தைப் பெறும்போதெல்லாம், கோபப்படுவதற்குப் பதிலாக, நமது தற்போதைய மற்றும் முந்தைய வாழ்க்கையைப் பற்றியும், விமர்சனத்திற்கு தகுதியானவர்களாக நாம் என்ன செய்திருக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். "நமக்குத் தேவைப்படும்போது எதிர்ப்புகளைப் பயன்படுத்தாவிட்டால், அவற்றால் என்ன பயன்?" என்று ஒரு இந்திய மகாசித்தர் தெரிவித்துள்ளார்.
அன்பு மற்றும் இரக்கத்துடனான பொறுமை
யாராவது உங்கள் மீது கோபமாக இருந்தால், அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், தங்கள் சொந்த மாயைகளின் செல்வாக்கின் கீழ் செயல்படுவதாகவும் கருதுங்கள் - உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் உண்மையான நோக்கம் அவர்களுக்கு இல்லை. உங்களுக்கும் மாயைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் உங்களைத் துரத்திச் சென்று உங்களிடம் கத்தி மிரட்டினால், நீங்களும் அவருடன் கோபத்துடன் பதிலளித்தால், நீங்களும் மனநலம் பாதித்தவரே.
நிச்சயமாக பித்துபிடித்த, மன பலவீனம் போன்ற வகையான நிலையான பைத்தியக்காரத்தனங்கள் இன்னும் உள்ளன, ஆனால் ஒரு நொடி நேர கோபம் பைத்தியக்காரத்தனத்தின் ஒரு மின்னல் போன்றது. ஒரு கோபக்காரன் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகிறான் - அவர்கள் மிகவும் நேசத்துக்குரிய உடைமைகளை உடைத்துவிடலாம்; அவர்கள் வாழ்க்கையின் மதிப்பை மறந்துவிட்டு மற்றவர்களைக் கொல்லலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம். எனவே, நாம் அவர்களை அன்புடனும் கருணையுடனும் நடத்த வேண்டும்.
ஆசிரியர் மற்றும் சீடரின் பொறுமை
ஒரு ஆசிரியர் இல்லாமல், ஒரு சீடன் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. யாரும் நமக்கு பொறுமையின் பொருளாக செயல்படவில்லை என்றால், நாம் பொறுமையை வளர்த்துக் கொள்ள முடியாது. எனவே நம் மீது கோபப்படுபவர் பொறுமையின் ஆசிரியர். எதிரிகளுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று சாந்திதேவா கூறினார். போதிசத்வ நடத்தையில் ஈடுபடுவதில், பொறுமையின் பொருள் தாராள மனப்பான்மையை விட அரிதானது என்று கூறப்படுகிறது. உலகம் யாசகர்களால் நிறைந்துள்ளது; ஆனால் ஒருவர் பொறுமையின் பொருளாக செயல்பட, நாம் முதலில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
வெற்றிடப் பொறுமையின் வடிவம்
கோபம், பொறுமை போன்றவற்றின் சுய-நிறுவப்பட்ட இருப்பு இல்லாததைப் பற்றி தியானியுங்கள். அது போல தீங்கு விளைவிக்கவோ அல்லது தீங்கு செய்யவோ, கோபத்தை ஏற்படுத்தவோ அல்லது கோபப்படவோ உண்மையிலேயே இருக்கும் எந்தப் பொருளும் இல்லை. "இந்த எதிரிகள் அனைவரும் எனது சொந்த அறியாமை, மாயைகள் மற்றும் உண்மையான இருப்புக்கான பிடிப்பு காரணமாக எனக்குத் தோன்றுகிறார்கள். புத்தர்களுக்கும் போதிசத்துவர்களுக்கும் ஒருபோதும் எதிரிகள் இல்லை. எனது மாயைகளால் நான் அவர்களைப் பெற்றுள்ளேன்" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அவற்றின் வெறுமைத் தன்மையைப் பாருங்கள். மாயைகள் இல்லாமல் அவற்றைப் பாருங்கள்.
எதிரிகளையும் தீங்குகளையும் ஒரு கனவில் இருப்பது போல் நடத்துங்கள் என்று மற்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு கனவில், எல்லாம் உண்மையானதாகத் தெரிகிறது, ஆனால் நாம் விழித்தெழுந்தபோது எதுவும் நடக்கவில்லை என்பதைக் காண்கிறோம்.
நிச்சயமாக நாம் கோபப்படுகிறோம், ஆனால் குறைந்தபட்சம் நம் கோபத்தின் நீளத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம், நீண்ட நேரம் வெறுப்புணர்வை வைத்திருக்கக்கூடாது. சாந்திதேவா, கோபத்தைப் போல தீவிரமான எதிர்மறை சக்தி எதுவும் இல்லை என்றும், பொறுமையை விட சிறந்த துறவுப் பயிற்சி எதுவும் இல்லை என்றும் கூறினார். கோபம் பற்றுதலை விட மிகவும் மோசமானது. பற்றுதல் வன்முறையை உள்ளடக்குவதில்லை, மேலும் ஒருவருக்குள் உள்நோக்கமாக இருக்கிறது. ஆனால் கோபம் வன்முறையானது, அது தன்னையும் மற்றவர்களையும் பாதிக்கிறது, சுற்றுச்சூழலை அழிக்கிறது. நாம் அழிவுகரமான செயல்களைச் செய்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நாம் எப்போதும் கோபப்படுவதால் தான். நாம் கோபமாக இருந்தால், மிகவும் சுவையான உணவுக்கு கூட சுவை இருக்காது. நாம் கோபமாக இருந்தால், எவ்வளவு ஒப்பனை, நகைகள் மற்றும் நேர்த்தியான ஆடைகளை அணிந்தாலும், நாம் அசிங்கமாகத் தெரிகிறோம் - நம் முகத்தின் நிறம் மாறுகிறது. போதிசத்துவர்களுக்கு, கொஞ்சம் கோபம் இருப்பதன் வீழ்ச்சி, பற்றுதலின் நூறு வீழ்ச்சிகளை விட மிகவும் மோசமானது.
உடைக்கப்படாத பரம்பரையின் முக்கியத்துவம்
இத்துடன் இந்த சொற்பொழிவு முடிகிறது, இது ஒரு பிரிக்கப்படாத பரம்பரையிலிருந்து வருகிறது. பரம்பரையை நேராக வைத்திருப்பது முக்கியம். இது புத்தர் வரை செல்லும் உத்வேகத்தின் பரம்பரை. ஒரு சொற்பொழிவில், "எனக்கு வாய்வழி பரிமாற்றம் ஒருபோதும் கிடைக்கவில்லை, ஆனால் இப்போது நான் அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன்" என்று கூறிய ஒரு லாமாவைப் பற்றிய ஒரு நகைச்சுவை உள்ளது.