மனப் பயிற்சிக்கான எட்டு வசனங்களின் கருத்தாக்கம் - தலாய் லாமா

சிலநேரங்களில் நாம் மிகவும் எதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்கிறோம் அல்லது மற்றவர்கள் நம்மை வசைபாடுவார்கள் அல்லது நாம் உதவியவர்கள் நமக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். நாம் கோபமடைந்து அவர்களை வருத்தப்படவைத்தால், மற்றவர்களுக்கு உதவுவதற்கான திறனை நாம் இழக்கிறோம். ஆனால் மனப்பயிற்சி முறைகள் மூலம், அவர்களை நாம் அணுகும் முறையை மாற்றலாம். அதனால் நாம் மட்டும் அமைதியாக இல்லாமல், மற்றவர்களுக்கு உதவும் சிறந்த திறனைப் பெற முடியும். கடம்பா கெஷே லங்க்ரி தங்பாவின் “மனப்பயிற்சிக்கான எட்டு வசனங்கள்” அல்லது அணுகுமுறை பயிற்சியானது நம்முடைய மனதை ஒரு வழிமுறையோடு எப்படி பயிற்சிக்க முடியும் என்பதை நமக்கு விளக்குகிறது. இதனால் நாம் மனஅமைதி இல்லாத அபாய நிலையில் இருக்கும் போது நம்மால் நம்முடைய அணுகுமுறையை மாற்றி ஞானமடைவதற்கு இந்தப் பயிற்சியானது உதவுகிறது. முதல் ஏழு வசனங்களானது அன்பு, கருணை மற்றும் போதிசிட்டாவை அணுகும் முறைகளை விளக்குகிறது, எட்டாவது வனமானது பாகுபடுத்தும் விழிப்புணர்வை ஞானத்தோடு கையாளும் முறையை பயிற்சிவிக்கிறது.

வசனம் 1: அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ரத்தினங்களை விட அனைத்து உயிரினங்களும் முதன்மையானவை

உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காக, விரும்பியதைத் தரும் ரத்தினங்களை விட, வரையறுக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் எவ்வளவு உயர்ந்தவை என்பதைக் கருத்தில் கொண்டு, நான் எப்போதும் அவற்றைப் போற்றுவேன்.

நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம் மற்ற உயிரினங்களும் மகிழ்ச்சியையே விரும்புகின்றன சோகத்தில் இருந்து முழுவதும் விடுபட வேண்டுகிறோம். இந்த மட்டத்தில் பார்த்தால் நாம் அனைவருமே சமமான விருப்பத்தை கொண்டிருக்கிறோம். இருப்பினும் நாம் ஒவ்வொருவரும் ஒரு தனிநபர், ஆனால் மற்ற உயிரினங்களோ எண்ணிலடங்காத அளவில் உள்ளன. 

இப்போது இதனை கருத்தில் கொள்ள இரண்டு அணுகுமுறைகள் உள்ளன: ஒன்று நம்மை மட்டுமே போற்றி புகழ்வது மற்றொன்று பிறரை போற்றுவது. சுய-போற்றுதல் அணுகுமுறை நம்மை தனிமைப்படுத்தும். நாம் மிகவும் முக்கியமானவர்கள் என்று நாம் நினைப்போம் மேலும் நம்முடைய அடிப்படை விருப்பமே நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எல்லாமும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். இதில் இருந்து எப்படி விடுபடுவது என்று நமக்கு தெரியாது. உண்மையில் சுய-போற்றுதலுடன் செயல்படுவது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. அதுவே மற்றவர்களை போற்றும் மனம் படைத்தவர்கள் தன்னை விட மற்ற அனைத்து இதர உயிர்களையும் போற்றி அவற்றை மதிக்கத் தெரிந்தவர்கள் சிறப்பான அனுபவத்தை பெறுவர். இப்படி செயல்படுபவர்களுக்கு தானாகவே மகிழ்ச்சி வந்து சேரும். 

உதாரணத்திற்கு, மக்களுக்கு உதவும் சேவை செய்யும் உண்மையான அரசியல்வாதிகள் வரலாற்றில் மரியாதையோடு நினைவுகூறப்படுகின்றனர், மாறாக மக்களை சீரழிக்கும் மோசமான செயல்களைச் செய்யும் அரசியல்வாதிகள் மோசமான மனிதர்கள் என்ற உதாரணத்திற்கு அடையாளமாக வரலாற்றில் இருக்கின்றனர். மதம், அடுத்த ஜென்மம், அனைத்தையும் துறத்தல் இதை ஒரு புறம் வைத்து விட்டு இந்த நொடியில் இந்த வாழ்நாளில் சுயநலமாகவும் சுய-மையப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதும் அவர்களுக்கு எதிர்மறை விளைவுகளையே கொண்டு வரும். அன்னை தெரசா போன்றவர்கள், தங்களுடைய மொத்த வாழ்நாளையும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தன்னலமின்றி அர்ப்பணித்தார்கள், உதவியற்றவர்கள், தேவையில் இருந்தவர்களுக்கு அவர் செய்த சேவையால் வரலாற்றில் என்றும் அவர் மரியாதையோடு பார்க்கப்படுகிறார். அவரைப் பற்றி எதிர்மறையாக மற்றவர்கள் கூறுவதற்கு ஒரு குறை கூட இல்லாத அளவு தன் வாழ்நாளை பிறரின் சேவைக்காக அர்ப்பணித்தவர் தெரசா.

மற்றவர்களை போற்றுவதன் பலன் இது தான்: நமக்கு தேவையோ இல்லையோ, அவர்கள் நம்முடைய உறவினர்களாக இல்லாவிட்டாலும் நம்மை எப்போதும் விரும்புவார்கள், நம்முடன் இருக்க விரும்புவார்கள், நம்முடன் இதமான ஒரு உணர்வைக் கொண்டிருப்பார்கள். ஒருவரை முகத்திற்கு முன் இனிமையாக பேசிவிட்டு, அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி மோசமாக பேசும் நபராக நீங்கள் இருந்தால், யாருக்கும் உங்களைப் பிடிக்காது. எனவே, இந்த ஜென்மத்தில் கூட, நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அதே போல முடிந்தவரை மிகச் சிறிய சுயநல எண்ணங்களைக் கொண்டிருந்தால், நாம் அதிக மகிழ்ச்சியை அனுபவிப்போம். 

நம்முடைய வாழ்நாள் மிக நீண்டதல்ல; அதிகபட்சம் 100 வயது வரை வாழ்வோம். இந்த வாழ்நாளில் நாம் கருணையோடு, கனிவாகவும் மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவராகவும் சுயநலம் மற்றும் கோபத்தை குறைத்துக் கொள்பவராகவும் இருந்தால் அது மிகவும் அற்புதமானது. உண்மையிலேயே மகிழ்ச்சிக்கான காரணம் அதுவே. நாம் சுயநலத்துடன் இருந்தால், அனைத்திலும் நம்மையே முன்னிலைப்படுத்துவோம் மற்றவர்களை இரண்டாம் பட்சமாகக் கருதுவோம். இதன் முடிவானது இறுதியில் நம்மையே அழித்துவிடும். மனரீதியில் நம்மை கடைசியாகவும் மற்றவர்களை முதல் இடத்திலும் கருதுவதே இதில் இருந்து விடுபடுவதற்கான வழி. எனவே அடுத்த ஜென்மம் அல்லது நிர்வான நிலையைப் பற்றி கவலையடையாதீர்கள்; இந்த ஜென்மத்தில் நாம் நல்லவர்களாக, இலகிய-மனம் கொண்டவராக, சுயநலமில்லாதவராக, நாட்டிற்கு நல்ல குடிமகனாக இருந்தால், அவை மெல்ல நம்மை வந்துசேரும்.

நாம் பௌத்தர்களா, கிறிஸ்தவர்களா அல்லது கம்யூனிசவாதிகளா என்பது தேவையில்லாதது; முக்கியமான விஷயம் என்னவெனில் நாம் மனிதர்களாக இருக்கும் வரை, நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். பௌத்தத்தின் போதனை அதுவே ஆகும்; உலகிலுள்ள அனைத்து மதங்களும் வலியுறுத்தும் கருத்தும் அதுவே. பௌத்த போதனைகள் அனைத்தும் சுயநலத்தை ஒழித்து மற்றவர்களை போற்றுவதை வலியுறுத்துகின்றன. எனினும் சாந்திதேவாவின் அற்புத படைப்பான போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல், இதற்கு உதவும் மிகச்சிறந்த உதாரணமாகும். நானும் கூட இந்த புத்தகத்தில் இருக்கும்படியே பயிற்சித்தேன்; அவை அதீத பயன் தரக்கூடியவையாகும். 

நம்முடைய மனம் மிகவும் தந்திரமானது, அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் நிலையான முயற்சி எடுத்து விடாமுயற்சியுடனும் தர்க காரணம் மற்றும் நிதானமான பகுப்பாய்வும் செய்தால், நம்முடைய மனதை கட்டுப்படுத்தவும் முடியும் அதனை சிறப்பானதாக மாற்றவும் முடியும். 

நம்முடைய கோபத்தை அடக்கி வைத்திருக்கக் கூடாது என்று சில மேற்கத்திய உளவியலாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், நாம் கோபத்தை பழக்கப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்! வெளிப்படுத்தக் கூடிய மனப் பிரச்னைகள் மற்றும் வெளிப்படுத்த தேவை இல்லாத மனப் பிரச்னைகளுக்கும் இடையில் இருக்கும் முக்கியமான வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் நாம் செய்தது தவறாக இருக்கலாம் அந்த நேரத்தில் நம்முடைய சோகத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருக்காமல் அதனை வெளிப்படுத்துவது நமக்கு சரியாக இருக்கும். ஆனால் அதை கோபத்துடன் வெளிப்படுத்துவது எப்போதும் உதவியாக இருக்காது. கோபம் போன்ற தொந்தரவு செய்யும் எதிர்மறையான உணர்வுகளோடே நாம் இருந்தால் அது நம்முடைய குணநலனாகிவிடும். ஒவ்வொரு முறை கோபத்தை வெளிப்படுத்தும் போதும், அதை மீண்டும் வெளிப்படுத்துவது எளிமையாகிவிடும். நாம் அதனை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். ஒருகட்டத்தில் அதனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு கொடூரமான நபராகவே நாம் மாறி இருப்போம். எனவே, மனநலப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சிலர் சரியாக வெளிப்படுத்தப்படுகின்றனர், ஆனால் மற்றவர்கள் அப்படி வெளிப்படுத்துவதில்லை.

முதலில் நாம் நம்முடைய தொந்தரவான உணர்வுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும், நிச்சயம் அது மிகவும் கடினமானது. முதல் நாள், முதல் வாரம், முதல் மாதம் நம்மால் சரிவர கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து முயற்சித்தால், நம்முடைய எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். மனநிலையை மேம்படுத்துவது என்பது மருந்துகளாலோ அல்லது இதர வேதியியல் பொருட்களாலோ வராது, அது மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நடக்கும். எனவே, நம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமெனில் அவை தற்காலிகமானதோ அல்லது இறுதியானதோ எதுவாக இருந்தாலும் நாம் சுய-போற்றுதலைக் கொண்டிருக்காமல் நம்முடைய மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நாம் விருப்பத்தை நிறைவேற்றும் ரத்தினங்களை விட மற்ற உயிர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால், எல்லாவற்றையும் விட நாம் எப்போதும் மற்ற உயிர்களைப் போற்ற வேண்டும், ஏனெனில் மற்றவர்களை போற்றும் அணுகுமுறையே நம்முடைய அனைத்து விருப்பங்களையும் உண்மையில் நிறைவேற்றும். 

நம்முடைய மன நிலையை மேம்படுத்துவது, பிறருக்கு உதவுவது இரண்டுமே முக்கியமானது. முதலில் நம்முடைய நோக்கம் தூய்மையாக இல்லாவிட்டால், நாம் என்ன செய்தாலும் அது திருப்திகரமாக இருக்காது. எனவே, நாம் முதலில் செய்ய வேண்டியது தூய நோக்கத்தை விதைக்க வேண்டும். அதற்காக மற்றவர்களுக்கு ஏதேனும் உதவுவதற்கு முன்னர் அந்த நோக்கம் முழுவதுமாக வளர்ந்து வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. நிச்சயமாக மற்றவர்களுக்கு உதவ வேண்டுமெனில் நாம் முழுவதும் ஞானமடைந்த புத்தர்களாக இருத்தல் வேண்டும். பிறருக்கு எல்லையில்லா உதவிகளைச் செய்வதற்கு, ஆர்ய போதிசத்வத்தின் பூமிநிலைகளில் ஒன்றை நாம் அடைந்திருக்க வேண்டும். அதாவது, வெற்றிடம் - வெறுமை - பற்றிய கருத்தியல் சாராத அறிவாற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும், மேலும் புலன்களுக்கு அப்பாற்பட்ட புலனுணர்வு சக்திகளை அடைய வேண்டும். இருப்பினும், நாம் செய்யக்கூடிய உதவியின் பல நிலைகள் உள்ளன. இந்தத் தகுதிகளை அடைவதற்கு முன்பே, நாம் போதிசத்துவர்களைப் போல செயல்பட முயற்சி செய்யலாம். ஆனால், இயல்பாக பார்த்தால், நமது செயல்கள் அவர்களின் செயல்களை விட குறைவான பலனயே அளிக்கும்.

எனவே, நாம் முழு தகுதியையும் பெறும்வரை காத்திருக்காமல், ஒரு நல்ல நோக்கத்தை நாம் உருவாக்கலாம், அதன் மூலம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம். ஏதோ ஒரு இடத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு தியானமோ பாராயனமோ செய்வதையோ விட இது மிகச் சமமான ஒரு அணுகுமுறை ஆகும். நிச்சயமாக, இது தனி நபரைச் சார்ந்தது. நாம் நம்பிக்கையோடு ஒரு சின்ன கிராமத்தில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நம்மால் மறுசீரமைப்பின் பலனைப் பெற முடியும், அது வேறு. இதை விட செயல்பாட்டில் பாதி நேரமும் தியானத்தை பயிற்சிப்பதில் பாதி நேரத்தையும் செலவிடுவது சிறந்தது. 

வசனம் 2: மற்றவர்களை விட தன்னை குறைவாகக் கருதுவது மற்றும் தன்னைவிட மற்றவர்களை உயர்வாகக் கருதுதல்

யாருடைனாவது நான் வரும்போது, என்னுடைய ஆழ் மனதில் இருந்து மற்றவரை உயர்வாகவும் என்னை தாழ்வாகவும் கருதுவேன். 

நாம் யாருடன் இருக்கிறோம் என்பது ஒரு விஷயமல்ல, நாம் எப்போதும், “நான் அவனை விட உறுதியானவன்”, “நான் அவளை விட மிகவும் அழகானவள்”, “நான் மிகவும் புத்திசாலி”, “நான் வசதியானவன்”, “நான் அதிக திறன் உடையவன்” என்று கருதுகிறோம். இது நல்லதல்ல. மாறாக, நாம் எப்போதும் பணிவுடன் இருத்தல் வேண்டும். நாம் மற்றவர்களுக்கு உதவினாலும் தொண்டுப் பணியில் ஈடுபட்டாலும், விளிம்பு நிலையில் இருப்பவர்களை பாதுகாக்கும் மிகச் சக்திவாய்ந்தவர்கள் நாம் என்கிற எண்ணத்தை கொண்டிருக்கக் கூடாது. அதுவும் ஒரு வகையில் பெருமை தான். மாறாக, இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது மிகப்பணிவுடன் மக்களுக்கு சேவை செய்கிறோம் என்கிற சிந்தனையை கொண்டிருக்க வேண்டும்.  

உதாரணத்திற்கு விலங்குகளோடு நம்மை ஒப்பிட்டு பார்த்தால், “எனக்கு மனித உடல் இருக்கிறது”, “நான் ஒரு துறவி”, “நான் ஒரு கன்னியாஸ்திரி ” அதனால் அவற்றை விட நான் உயர்ந்தவன் என்று நாம் நினைக்கிறோம்.  ஒரு விதத்தில் பார்த்தால், நாம் மனித உடலைக் கொண்டிருக்கிறோம் புத்தரின் போதனைகளை பயிற்சிக்கிறோம், அதனால் நாம் பூச்சிகளை விட சிறந்தவர்கள். இன்னொரு விதத்தில் பார்த்தால், பூச்சிகள் ஒன்றும் அறியாதவை, அது வஞ்சனை அறியாது, ஆனால் மனிதர்களாகிய நாம் பொய் கூறுவோம், நம்மை நெறிபடுத்திக் கொள்ளவோ அல்லது நாம் நினைத்ததை அடைவதற்கோ பல நேரங்களில் தவறான வழிகளில் கூட செயல்படுவோம். இந்த நிலையில் பார்த்தால், நாம் பூச்சிகளை விட மோசமானவர்கள், அவை எதற்காகவும் நடிக்காமல் தன்னுடைய இயல்பிலேயே இருக்கின்றன. பணிவை பயிற்சிப்பதற்கான ஒரு வழிமுறை இதுவாகும். 

வசனம் 3: தொந்தரவு செய்யும் உணர்ச்சிகளை பலவந்தமான வழிமுறைகளால் எதிர்கொண்டு தவிர்த்தல்

நான் என்ன செய்தாலும், என்னுடைய மன ஓட்டத்தை நான் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறேன், சிக்கலான உணர்வுகள் எழும் நேரத்தில், அது என்னையும் மற்றவர்களையும் பலவீனப்படுத்துவதால், அவற்றை நான் பலவந்தமான முறையில் எதிர்கொண்டு தடுக்கிறேன்.

நாம் மிகவும் சுயநலமாக நம்மை பற்றி மட்டுமே சிந்தித்து மற்றவர்களை ஒதுக்கிவிட்டு செயல்படும் நேரங்களில் நம்முடைய மனதை நாம் ஆராய்ந்தால், சிக்கலான உணர்வுகளும் எதிர்மறை அணுகுமுறைகளுமே இந்த நடத்தைக்கான வேர்க்காரணம் என்பது தெளிவாக தெரியும். அவை நம்முடைய மனதை பெரிதும் பாதிக்கும் பட்சத்தில், நாம் அவற்றின் ஆளுமைக்கு கீழ் செல்கிறோம் என்பதை உணரும் நேரத்தில், நாம் அதற்கான மாற்று மருந்தை கொடுக்க வேண்டும். 

அனைத்து சிக்கலான உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் உள்ள பொதுவான எதிரி வெற்றிடத்தின் மீதான தியானம்; ஆனால், தொடக்கநிலையாளர்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு குறிப்பிட்ட மாற்று மருந்தும் இருக்கிறது. பற்றுதலுக்கு அழகின்மைக்கான தியானத்தை நாம் செய்யலாம், கோபத்திற்கு அன்புக்கான தியானத்தையும், அப்பாவித்தனத்திற்கு ஒன்றை சார்ந்து எழுவதற்கான தியானத்தையும், பல்வேறு சிக்கலான சிந்தனைகளுக்கு சுவாசம் மற்றும் சக்தி நிலைக்கான தியானத்தையும் செய்யலாம். 

பொருட்கள் மீது நாம் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறோம் ஏனெனில் அவற்றை மிகவும் கவர்ந்திழுப்பவையாக பார்க்கிறோம். பொருட்களிடம் எந்த கவர்ந்திழுக்கும் தன்மையும் இல்லை, அவை அழகானவை அல்ல என்கிற விதத்தில் பார்க்க முயற்சியுங்கள். உதாரணத்திற்கு, பிறரின் உடல் மீது நாம் பற்றுதலை வளர்க்கிறோம் அவருடைய உருவம் மிகவும் ஈர்க்கக் கூடியது என்று பார்க்கிறோம். இந்த ஈர்ப்பு பற்றி நாம் ஆராயத் தொடங்கினால், தோல் மீது தான் நம்முடைய ஈர்ப்பு இருக்கிறது என்பதை கண்டறியலாம். ஒரு உடல் அழகாகத் தோன்றுவதற்கு அதனுள் இருக்கும் சதை, ரத்தம், எலும்புகள், தோல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து அழகான தோற்றத்தைத் தருகின்றன.

சரி, இப்போது மனித தோலைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்: உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்ளுங்கள். தோலில் இருந்து ஒரு சிறு பகுதி பெயர்ந்து வந்ததும் அதை நீங்கள் சில நாட்கள் ஒரு அலமாரியில் வைத்தால், அது அழுகிப் போகும். அதுவே தோலின் தன்மை. உடலின் இதர பாகங்களும் அப்படித் தான் இருக்கின்றன. மனித சதைக்கு எந்த அழகும் இல்லை. அழகான முகத்தில் கூட சிராய்ப்புகள் ஏற்பட்டால் அதன் பின்னர் முகத்தில் எதுவும் அழகாக இருக்காது. அழகாக இருப்பதைப் போலவே அழகின்றி இருப்பதும் மனித உடலின் இயல்பு. மனித எலும்புகள், எலும்புக் கூடும் அழியக் கூடியவை.  மண்டை ஓடு மற்றும் எலும்புகள் குறுக்கலிட்டு இருக்கும் அறிகுறி மிகவும் எதிர்மறையான அர்த்தத்தைக் கொண்டுள்ளது, இல்லையா?

நாம் நேசிக்கிறோம் பற்றுதல் கொண்டிருக்கிறோம் என்று நினைப்பவற்றின் மீது இவ்வாறு பகுப்பாய வேண்டும் – இந்த வார்த்தைகளை மனதில் கொண்டு நீண்ட நாள் ஆசை மற்றும் பற்றுதல் என்பவை எதிர்மறை உணர்வு என்பதை அறிதல் வேண்டும். ஒரு பொருளுக்கு அழகில்லாத மற்றொரு பக்கமும் இருக்கிறது என்று சிந்தியுங்கள்; மனிதன் அல்லது ஒரு பொருளின் இயல்பு பற்றி இந்த கோணத்தில் பகுப்பாய்வு செய்யுங்கள். இந்த எண்ணங்களால் நம்முடைய பற்றுதலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், சிறிதளவேனும் நாம் விழிப்புணர்வை பெறுவோம். பொருட்களின் அழகில்லாத பக்கத்தை எப்படி பார்த்துப் பழகி தியானிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை இது வளர்க்கிறது. 

“ஒரு நபர் அழகாக இருக்கிறார் அதனால் நான் அவரை போற்றுகிறேன், அவர் மீது இரக்கம் காட்டுகிறேன்” என்று காரணத்தின் அடிப்படையில் அன்பு காட்டுவதோ இரக்கம் காட்டுவதோ கூடாது. தூய்மையான அன்பின் அடிப்படையானது, “இது மகிழ்ச்சியை விரும்பும், துன்பத்தை விரும்பாத, மகிழ்ச்சியாக இருக்க உரிமை உள்ள ஒரு உயிரினம். அதன் அடிப்படையில், நான் அன்பையும் இரக்கத்தையும் காட்டுகிறேன்" என்று உணர்வதாகும். இந்த வகையான அன்பு முதல் நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, இது அப்பாவித்தனம் மற்றும் அறியாமையை அடிப்படையாகக் கொண்டது, எனவே முற்றிலும் அர்த்தமற்றது.

அன்புக்கும் இரக்கத்துக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அன்பு என்பது பற்றுதலுடன் தொடர்புடையது, நாம் விரும்பும் ஒரு பொருளில் லேசான மாறுதல் வந்தாலும் அதன் மீதான நம்முடைய விருப்பம் மாறிவிடும். ஏனெனில் நம்முடைய உணர்வு என்பது மிக மேலோட்டமான ஏதோ ஒன்றின் அடிப்படையிலானது. உதாரணத்திற்கு ஒரு புதுமண தம்பதியை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணமான சில வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்களில் அந்த தம்பதி எதிரிகளாகி விடுகின்றனர், கடைசியில் விவாகரத்தில் வந்து அந்த திருமணம் முடிகிறது. ஆழமான அன்பால் திருமணம் செய்து கொண்டார்கள் – வெறுப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென யாரும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் – ஆனால், குறுகிய காலத்திலேயே, அனைத்தும் மாறிவிடுகிறது. ஏன்? ஏனெனில் அந்த உறவு மேலோட்டமானது; ஒரு நபரின் சின்ன மாற்றம் பிறருடைய ஒட்டுமொத்த அணுகுமுறையையும் மாற்றுகிறது. 

“என்னைப் போலவே பிறரும் மனிதர்கள். நான் மகிழ்ச்சியை விரும்புகிறேன்; அதே போல அவரும் மகிழ்ச்சியை விரும்புகிறார். ஒரு உயிரினமாக மகிழ்ச்சியாக இருக்கும் உரிமை எனக்கு இருக்கிறது; அதே காரணத்திற்காக, அந்த நபரும் மகிழ்ச்சியாக இருக்க உரிமை இருக்கிறது” என்பதை நாம் சிந்திக்க வேண்டும். காரணங்களை இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது தூய்மையான அன்பு மற்றும் இரக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். அதன் பின்னர் அந்த நபரைப் பற்றிய நம்முடைய பார்வையானது எப்படி மாறினாலும் அடிப்படையில் அவரும் ஒரு உயிரினம் என்பதை உணர்வோம். அன்பு மற்றும் இரக்கம் காட்டுவதற்கான முக்கிய காரணம் எப்போதும் இருப்பதனால், பிறரை நோக்கிய நம்முடைய உணர்வுகளானது எப்போதும் நிலைத்திருக்கும்.

நிச்சயமாக, நாம் விரும்பும் ஒருவருடன் இருந்தாலோ நாம் பற்றுதல் கொண்டுள்ள பொருட்களை வைத்திருந்தாலோ புதையலை அடைந்துவிட்ட ஒரு அனுபவத்தை பெறுவோம். ஆனால் நாகார்ஜூனா தன்னுடைய விலைமதிப்பற்ற மாலை (சமஸ். ரத்னவலி) (169)-யில் கூறியதைப் போல …

அரிக்கும் போது சொறிவது இன்பமாக இருக்கும், ஆனால் அதைவிட இன்பம் அரிப்பு இல்லாமல் இருப்பது. அதே போலத்தான், உலகளாவிய விருப்பங்களை பூர்த்தி செய்வது இன்பமானது, ஆனால் விருப்பங்களே இல்லாமல் இருப்பது அவை விட அதிக இன்பத்தை தரக்கூடியது. 

கோபத்திற்கான மாற்று மருந்து அன்பிற்கான தியானத்தை செய்தலாகும். ஏனெனில் கோபம் என்பது மிகவும் கடினமானது, கரடுமுரமான மனநிலையைக் கொண்டது அதனை மென்மைபடுத்த அன்பு தேவையாகும். 

அப்பாவித்தனத்தை பொருத்தவரையில், நாம் சார்ந்து எழுதலின் பனிரெண்டு தொடர்புகளோடு தியானிக்க வேண்டும். விழிப்புணர்வின்மை அல்லது தவிர்த்தலில் இருந்து தொடங்கி வயதாகி இறத்தல் வரை செல்வதற்காக தியானிக்க வேண்டும். நுட்பமான மட்டத்தில் இருந்து பார்த்தால், அனைத்து நிகழ்வுகளும் உண்மையிலேயே நிறுவப்பட்டதற்கான இருப்பு இல்லாதவை என்பதை நிறுவுவதற்கு, சார்ந்து எழுவதை நாம் காரணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

வசனம் 4: கொடூரமானவர்களை ரத்தினப் புதையலைப் போல போற்றுதல்

எதிர்மறைகளாலும் கடுமையான பிரச்னைகளாலும் ஆட்கொள்ளப்பட்ட, இவர்கள் கொடூரமானவர்கள் என்கிற உள்ளுணர்வை நான் காணும் போதெல்லாம், கண்டுபிடிக்க முடியாத ரத்தினப் புதையலைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல அவர்களை போற்றுவேன்.

இயல்பாகவே ஒருவர் கொடூரமான, கடினமான, மகிழ்ச்சியில்லாத நபராக இருந்தால் நாம் அவரிடம் செல்லும் போது, அவரை தவிர்ப்போம் அதுவே நம்முடைய வழக்கமான எதிர்வினையாக இருக்கும். அது போன்ற சூழ்நிலைகளில், மற்றவர்கள் மீதான நம்முடைய அன்பும் அக்கறையும் குறையும். அதற்கு பதிலாக அன்பு கிடைக்காதவர்களுக்கு நாம் அன்பு காட்டலாம். இப்படி யோசித்து பாருங்கள் அவரை பயங்கரமானவராக பார்க்காமல் அன்பு மற்றும் இரக்கம் தேவைப்படுபவராக பார்க்கலாம், காணக் கிடைக்காத ஒரு பொக்கிஷத்தை நாம் கண்டிருக்கிறோம் என்று அவரை போற்றலாம். 

வசனம் 5: இழப்பை நாம் ஏற்றுக் கொண்டு வெற்றியை பிறருக்கு அளித்தல்

பொறாமை காரணமாக மற்றவர்கள் என்னைத் திட்டுதல், அவமானப்படுத்துதல் போன்ற நியாயமற்ற முறையில் நடத்தும்போது, அதனால் ஏற்படும் வலியையும் இழப்பையும் நானே ஏற்றுக் கொண்டு வெற்றியை அதாவது மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு வழங்குவேன்.

யாராவது நம்மை அவமானப்படுத்தினாலோ விமர்சித்தாலோ நாம் எதற்கும் லாயக்கு இல்லை, எதையும் செய்யத் தெரியாது என்று சொன்னாலோ, நாம் மிகவும் கோபமடைந்து அவருடன் சண்டையிடுகிறோம். நாம் அவ்வாறு செயல்படாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். பணிவு மற்றும் சகிப்புத் தன்மையோடு அவருடைய மோசமான வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

நாம் பணிவாக இருந்து கொடுஞ்சொற்களை ஏற்றுக் கொண்டாலும், நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுடன் யதார்த்தம் மாறாமல் இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய திறன்கள் மற்றும் பெருமைக்கு இடையே இருக்கும் வேற்றுமையை புரிந்து நாம் நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். நமக்கு இருக்கும் நல்ல குணங்கள் மற்றம் திறன்கள் மீது நம்பிக்கை வைத்து அதனை தைரியமாக பயன்படுத்த வேண்டும், ஆனால் இப்படிப்பட்ட நல்ல குணங்கள் இருக்கிறது என்ற பெருமிதத்தோடு அராஜக எண்ணத்தோடு செயல்படக் கூடாது.  பணிவாக இருக்க வேண்டுமெனில் முற்றிலும் தகுதியில்லாதவராகவோ உதவியில்லாதவராகவோ உணர வேண்டும் என்று அர்த்தமில்லை. பெருமைக்கு எதிரானதாக பணிவு வளர்க்கப்படுகிறது, ஆனால் நம்மிடம் உள்ள நல்ல குணங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

நமக்கு அதிக தைரியமும் பலமும் இருக்க வேண்டும், ஆனால் அவற்றைப் பற்றி பெருமை பேசவோ அல்லது பெரிதாகக் காட்டவோ கூடாது. தேவைப்படும் நேரங்களில்,சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சரியான விஷயத்திற்காக நாம் தைரியமாகப் போராடுகிறோம். அதுவே சரியானது. இந்த நல்ல குணங்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் நாம் எவ்வளவு பெரியவர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு, தேவைப்படும் நேரங்களில், எதுவும் செய்யாமல் பின்வாங்கினால், நாம் அதற்கு நேர்மாறாக இருக்கிறோம். முதல் நபர் மிகவும் தைரியமானவர், ஆனால் பெருமை இல்லை; மற்றவர் மிகவும் பெருமைப்படுகிறார், ஆனால் தைரியம் இல்லை.

 இந்த அறிவுரையை பொருத்தவரையில் இழப்பை நாம் ஏற்றுக் கொண்டு வெற்றியை பிறருக்கு அளிக்கிறோம், இரண்டு விதமான சூழ்நிலைகளை நாம் வேறுபடுத்த வேண்டும். ஒருபுறம் நம்முடைய சுய நன்மையில் மட்டுமே அக்கறை காட்டி மிகவும் சுயநல நோக்கத்துடன் இருந்தால், நம்முடைய வாழ்க்கை அச்சுறுத்தலில் இருந்தாலும் தோல்வியை நாம் ஏற்று வெற்றியை பிறருக்கு அளிக்க வேண்டும். ஆனால் இன்னொருபுறம், மற்றவர்களின் நலன் அச்சுறுத்தலில் இருப்பதைப் போன்ற சூழல் இருந்தால், நாம் மிகக் கடினமாக உழைத்து மற்றவர்களின் உரிமைகளுக்காக போராடினால் இழப்பை ஏற்க வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக, 46 இரண்டாம் நிலைகளில் ஒன்று போதிசத்வ சபதம், ஒருவர் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் செய்யும் சூழ்நிலைகளில், அனைத்து அமைதியான முறைகளும் தோல்வியடைந்தால், அந்த நபரின் செயல்களை உடனடியாக நிறுத்துவதற்கு பலவந்தமான முறைகளைப் பயன்படுத்துவதையோ அல்லது வேறு எதையும் பயன்படுத்துவதையோ தவிர்க்கக்கூடாது. நமக்குத் திறன் இருந்தும் நாம் பலவந்தமாகச் செயல்படவில்லை என்றால், அந்த உறுதிப்பாட்டை மீறுகிறோம் என்றும் கூட சொல்லலாம்.

இந்த போதிசத்வ சபதமும், இழப்பை ஏற்றுக்கொண்டு வெற்றியை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறும் ஐந்தாவது வசனமும் முரண்பாடாகத் தோன்றலாம்; ஆனால் நிதர்சனம் அதுவல்ல. போதிசத்வ கட்டளையானது மற்றவர்களின் நலனே நமது முக்கிய அக்கறை என்கிற சூழ்நிலையைப் பற்றி பேசுகிறது: ஒருவர் மிகவும் தீங்கு விளைவிக்கும், ஆபத்தான ஒன்றைச் செய்தால், தேவைப்பட்டால் அதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுத்து அதனை தடுத்து நிறுத்தலாம், அதில் தவறு இல்லை.

இப்போதெல்லாம், மிகவும் போட்டி நிறைந்த சமூகங்களில், வலுவான தற்காப்பு அல்லது அதுபோன்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் தேவைப்படுகின்றன. இருப்பினும், இவற்றிற்கான நோக்கம் சுயநல அக்கறையாக இருக்கக்கூடாது, மாறாக மற்றவர்கள் மீது கருணை மற்றும் இரக்கத்தின் விரிவான உணர்வுகளாக இருக்க வேண்டும். எதிர்மறை கர்மாவை உருவாக்குவதிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்ற நாம் செயல்பட்டால், இது முற்றிலும் சரியானது.

உறுதியான செயல்களை எப்போது செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது கடினமானது. இழப்பை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்று கருதும் போது, அதனால் மற்றவருக்கு கிடைக்கும் வெற்றி, அவர்களுக்கு நிரந்தர பலனைத் தருமா அல்லது தற்காலிகமான பலனை மட்டுமே தருமா என்பதைப் பார்க்க வேண்டும். இழப்பை நாமே ஏற்றுக் கொள்வதற்கான தாக்கத்தை நாமே ஏற்பதன் மூலம் அதன் மூலம் கிடைக்கும் சக்தி அல்லது திறன் பிறருக்கு எதிர்காலத்திற்கு உதவுமா என்பதைப் பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றை இப்போது செய்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு மற்றவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் விஷயங்களைச் செய்ய உதவும் ஒரு பெரிய அளவிலான நேர்மறையான சக்தியை அல்லது தகுதியை நாம் உருவாக்குவதும் சாத்தியமாகும். நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு காரணி இதுவாகும்.

போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் (v 83-84)-ல் சாந்திதேவா சொல்வதைப் போன்று:

ஒன்றன் பின் ஒன்றாக, தொலைதூர இலக்குகளை அடைதல்களை பயிற்சித்து உயர்ந்த மனப்பான்மைகளை நான் கடைப்பிடிப்பேன். சிறியதை நினைத்துப் பெரியதை ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்: மிக முக்கியமாக, மற்றவர்களுக்கான நன்மையைக் கருத்தில் கொள்வேன்.
இதனை உணர்ந்து, நான் எப்போதும் மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுவேன். தொலை நோக்கு பார்வை கொண்டவர்களுக்கு (ஒரு போதிசத்வா) அருளப்படுகிறது, மற்றவர்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இன்னொரு விதமாகச் சொன்னால், குறைபாடுகளை வெளியேற்றுவதற்காக வழக்கமான செயல்கள் சிலவற்றில் நாம் தடைகளை ஏற்படுத்தும் போது அதன் பயன்கள் நமக்கு கிடைக்கின்றனவா என்று மேலோட்டமாகவும் ஆழமாகவும் நாம் பகுப்பாய வேண்டும். சில நேரங்களில் அதனை விவரிப்பது கடினமாக இருந்தால், நம்முடைய இலக்கை சரிபார்க்க வேண்டும். 

சாந்திதேவாவின் பயிற்சிகளின் தொகுப்பில் (சமஸ். சிக்ஷாசமுக்கயா), சாந்திதேவா இதேபோல் போதிச்சிட்டாவுடன் செய்யப்படும் பொதுவாக தடைசெய்யப்பட்ட செயலின் நன்மைகள், அத்தகைய உந்துதல் இல்லாமல் அதைச் செய்வதன் எதிர்மறைகளை மிஞ்சும் இருக்கும் என்று கூறுகிறார்.

இது மிக முக்கியமானதாக இருந்தாலும், எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதற்கு இடையில் இருக்கும் பாகுபடுத்தும் கோட்டை பிரித்துப் பார்ப்பது சில நேரங்களில் மிகவும் கடினமானது. எனவே இதுபோன்றவற்றை விளக்கும் நூல்களை நாம் படிக்க வேண்டும். சில நூல்கள் குறிப்பிட்ட செயல்கள் தடைசெய்யப்பட்டவை என்று கூறுகின்றன; ஆனால் சில மேம்பட்ட நூல்கள் அதே செயல்களை அனுமதிக்கின்றன. இவற்றைப் பற்றி மிக அதிகமாக நாம் அறிந்து கொள்வதன் மூலம் எந்தச் சூழ்நிலையில் எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது எளிதாகிவிடும்.

வசனம் 6: நன்றி மறந்தவர்களை புனிதமான ஆசிரியர்களாகப் பாருங்கள்

நான் உதவி செய்த ஒருவர், அவரிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் போது, எனக்கு முற்றிலும் நியாயமற்ற முறையில் தீங்கு விளைவித்தாலும், அவரை ஒரு புனிதமான ஆசிரியராக நான் பார்க்கலாமா.

பொதுவாக நாம் பெரிதும் உதவி செய்தவர்கள் நமக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்; அவர்கள் நம்மிடம் நன்றி மறந்து நடந்து கொண்டால், அவர்கள் மீது நாம் கோபப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், நாம் கோபப்படக்கூடாது, மாறாக பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அத்தகையவர்களை நம் பொறுமையைச் சோதிக்கும் ஆசிரியர்களாக பார்க்க வேண்டும், எனவே அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். சாந்திதேவாவின் போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதலில் பொறுமை பற்றிய அனைத்து போதனைகளையும் இந்த வசனம் சுருக்கமாகக் கூறுகிறது.

பொறுமையை கடைபிடிக்க பல வழிமுறைகள் உள்ளன. கர்ம விதி பற்றிய நம்பிக்கை மற்றும் புரிதலுமே கூட பொறுமையை வளர்க்கின்றன. “நான் அனுபவிக்கும் இந்த துன்பம் முழுவதும் என்னுடைய தவறால் ஏற்பட்டது, இதனால் விளையும் அனைத்தும் முன் ஜென்மத்தில் நான் செய்த செயல்களின் முடிவு என்பதை நாம் உணர்கிறோம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றில் இருந்து நான் தப்பிக்க முடியாது, என்று அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் எதிர்காலத்தில் துன்பத்தை தவிர்க்க விரும்பினால், பொறுமை போன்ற ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை நான் கடைபிடிக்கிறேன். நாம் அனுபவிக்கும் துன்பத்தால் எரிச்சலோ கோபமோ அடைந்தால் அது எதிர்மறை கர்மாவை மட்டுமே உருவாக்கும், அது எதிர்காலத்தின் துரதிஷ்டத்திற்கு காரணமாகிவிடும்.” இது பொறுமையை பயிற்சி செய்யும் ஒரு வழியாகும்.

நாம் செய்ய வேண்டிய மற்றொன்று துன்பப்படும் இந்த உடலுக்காக தியானம் செய்தல்: “அனைத்து விதமான துன்பங்களுக்குமான அடிப்படை இந்த உடலும் மனமும். அது இயற்கையானது தன்னை அறியாமலே துன்பமும் அந்த உடலில் இருந்து எழுகிறது.” பொறுமையை வளர்க்க இது போன்ற புரிதல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். 

சாந்திதேவாவின் போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் (VI 10): கூறுவதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்:

சரி செய்ய முடியும் என்றால், ஏன் ஒரு விஷயத்திற்காக மோசமான மனநிலைக்கு ஆளாக வேண்டும்? அதை சரிசெய்ய முடியாவிட்டால், அதற்காக மோசமான மனநிலைக்கு ஆளாவதால் என்ன பயன்?

எனவே, நம்முடைய துன்பத்தை போக்குவதற்கு ஒரு வழியோ அல்லது ஒரு வாய்ப்போ இருந்தால், நாம் கவலைப் படலாம் அல்லது மோசமான மனநிலைக்கு ஆளாகலாம். அப்படி எதுவுமே செய்ய முடியாது எனும் போது, வருத்தப்படுவதும், சோகமடைவதும் துன்பத்தை போக்க ஒருபோதும் உதவாது. இந்த இரண்டு மிகத் தெளிவானது எளிமையானது. 

கோபப்படுவதன் தீமைகள் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பதன் நன்மைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாம் மனிதர்கள், எனவே, நமது சிறந்த குணங்களில் ஒன்று சிந்திக்கவும் தீர்மானிக்கவும் கூடிய திறன் ஆகும். நாம் பொறுமையை இழந்து கோபப்பட்டால், சரியான முடிவுகளை எடுக்கும் திறனை இழந்து, அதன் மூலம் பிரச்சினைகளைச் சமாளிக்க நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றான நமது மனித ஞானத்தை இழக்கிறோம். இது விலங்குகளிடம் இல்லாத ஒன்று. நாம் பொறுமையை இழந்து எரிச்சலடைந்தால், இந்த விலைமதிப்பற்ற கருவியை சேதப்படுத்துகிறோம். எனவே, தைரியத்துடனும் உறுதியுடனும் இருப்பதும், துன்பத்தை பொறுமையுடன் எதிர்கொள்வதும் மிகவும் சிறந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வசனம் 7: பிறரின் துன்பங்களை நாம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தல்

என் எல்லா தாய்மார்களுக்கும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரண்டில் எது நன்மை பயக்கும் மற்றும் மகிழ்ச்சியைத் தருமோ அனைத்தையும் நான் வழங்குகிறேன்; என் தாய்மார்களின் அனைத்து துன்பங்களையும் துயரங்களையும் நானே மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறேன்.

மற்றவர்களின் அனைத்து துன்பங்களையும் நாமே ஏற்றுக்கொண்டு, திடமான இரக்கம் மற்றும் அன்பால் தூண்டப்பட்டு, நமது எல்லா மகிழ்ச்சியையும் அவர்களுக்குக் கொடுக்கும் நடைமுறையை இது குறிக்கிறது.

நாம் மகிழ்ச்சியை விரும்புகிறோம், துன்பப்பட விரும்பவில்லை, மற்ற உயிர்களும் அதையே விரும்புகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். பிற உயிர்களும் துன்பத்தால் அவதிப்படுகின்றன, ஆனால் அதில் இருந்து விடுபடுவது எப்படி என்று அவற்றிற்கு தெரியவில்லை. இதன் அடிப்படையில், அவற்றின் அனைத்து துன்பங்கள், எதிர்மறை கர்மா முழுவதையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தை உருவாக்கி அவற்றை உடனடியாக நம் மீது சுமந்து கொள்ள பிரார்த்தனை செய்யலாம். அதேபோல், மற்ற உயிரினங்கள் தாங்கள் தேடும் மகிழ்ச்சியை இழந்து, அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் இருப்பது வெளிப்படையானது. இதனால், நமது உடல், செல்வம் மற்றும் நேர்மறை கர்ம சக்தி என நமது அனைத்து மகிழ்ச்சியையும் அவர்களுக்கு வழங்கி, அது உடனடியாக அவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம்.

நிச்சயமாக, நாம் உண்மையில் மற்றவர்களின் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நம் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும் என்பது சாத்தியமில்லாதது. உயிரினங்களுக்கிடையில் இதுபோன்ற பரிமாற்றம் நிகழும்போது, அது கடந்த காலத்தின் மிகவும் வலுவான, துண்டிக்கப்படாத கர்மாவுடைய தொடர்பின் விளைவாகும். இருப்பினும், இந்த தியானம் நம் மனதில் தைரியத்தை வளர்ப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த வழிமுறையாகும், எனவே, இது மிகவும் நன்மை பயக்கும் பயிற்சியாகும்.

கொடுப்பது வாங்குவது இரண்டையும் மாறி மாறிப் பயிற்சி செய்யுங்கள், அந்த இரண்டையும் சுவாசிப்பதில் பொருத்திப் பாருங்கள்" என்று ஏழு புள்ளி மனப் பயிற்சியில், கெஷே செகாவா கூறுகிறார். இது மறைமுகமாக, ரகசியமாக செய்யப்பட வேண்டும் என்று லாங்ரி தாங்பா கூறுகிறார். சாந்திதேவா போதிசத்வா நடத்தையில் ஈடுபடுவதிலும் (VIII 120) இதையே கூறுகிறார்:

எனவே, தனக்கும் மற்றவர்களுக்கும் விரைவாக பாதுகாப்பான வழிகாட்டுதலை வழங்க விரும்பும் எவரும் மிகவும் புனிதமான ரகசியத்தை பயிற்சி செய்ய வேண்டும்: அதுவே மற்றவர்களுடன் சுய பரிமாற்றம் செய்வதாகும்.

இந்தப் பயிற்சி "ரகசியம்" அல்லது "மறைக்கப்பட்டது" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது தொடக்கநிலை போதிசத்வர்களின் மனதிற்குப் பொருந்தாது: இது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயிற்சியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் (VIII 126cd) என்ற புத்தகத்தில், “மற்றவர்களின் நோக்கங்களுக்காக என்னை நானே துன்புறுத்திக் கொண்டால், நான் எல்லா மகிமைகளையும் பெறுவேன்” என்று சாந்திதேவா கூறுகிறார். ஆனால், விலைமதிப்பற்ற மாலையில் (11) “தர்மம் (பயிற்சி) என்பது உடலைத் துன்புறுத்துவது மட்டுமல்ல” என்று நாகார்ஜூனா கூறுகிறார். இவை முரண்பாடானவை அல்ல. சாந்திதேவா நம்மை நாமே துன்புறுத்த வேண்டும் அல்லது தீங்கு செய்ய வேண்டும் என்று கூறும்போது, நாம் நம்மைத் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. வலுவான, சுயநல எண்ணங்கள் எழும் சமயங்களில், நம்மை நாமே கட்டுப்படுத்த அவற்றுடன் மிகவும் வலுவாக வாதிட வேண்டும், அவற்றை அடக்க வலிமையான வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று சாந்திதேவா கூறுகிறார். வேறு விதமாகச் சொன்னால், நாம் நமது சுயநல மனதிற்கு தீங்கு விளைவிக்க வேண்டும்.

தன் சொந்த நலனில் கவனம் செலுத்துவதிலேயே முழுமையாக மூழ்கியிருக்கும் "நான்" என்பதற்கும், ஞானம் பெறப் போகும் "நான்" என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். இதில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. மேலும், சாந்திதேவரின் இந்த வசனத்தை அதற்கு முன்னும் பின்னும் வரும் வசனங்களின் சூழலில் நாம் பார்க்க வேண்டும்.

"நான்" என்பது பல விதங்களில் விவாதிக்கப்படுகிறது: உண்மையிலேயே இருக்கும் "நான்" என்பதற்கான புரிதல் உள்ளது; "நான்" என்ற விதத்தில் பார்க்கும் போது அதில் சுயநலம் உள்ளது; மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைப் பார்க்கும்போது நாம் ஈடுபடும் "நான்" உள்ளது; வெவ்வேறு சூழல்களில் சுயம், அதாவது "நான்" என்பது பற்றிய விவாதத்தை நாம் பார்க்க வேண்டும்.

உண்மையிலேயே அது மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் என்றால், ஒரு வரையறுக்கப்பட்ட உயிரினத்திற்கு நன்மை பயக்கும் என்றால், சம்சாரி இருப்பின் மூன்று தளங்களின் துன்பங்களை நாமே ஏற்றுக்கொள்வது அல்லது நரகங்களில் ஒன்றிற்குச் செல்வதும் பொருத்தமானது, இதைச் செய்வதற்கான தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களுக்காகவும் ஞானத்தை அடைய, நாம் மகிழ்ச்சியாகவும், நரகத்தில் எண்ணற்ற யுகங்களைச் செலவிடத் தயாராகவும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஏற்படும் தீங்குகளை நாமே ஏற்றுக்கொள்கிறோம் என்பது இதன் பொருள்.

நரக உலகங்களில் ஒன்றிற்குச் செல்லத் தயாராக இருப்பதற்கு தைரியத்தை வளர்த்துக் கொள்வதே முக்கியமான விஷயம்; அதற்காக நாம் உண்மையில் அங்கு செல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல. கடம்ப கெஷே செக்காவா இறக்கும் தருவாயில் இருந்தபோது, திடீரென்று தனது சீடர்களை அழைத்து, தனது நடைமுறை தோல்வியடைந்ததால், தனக்காக சிறப்பு பிரசாதங்கள், சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளைச் செய்யச் சொன்னார். ஏதோ பயங்கரமான ஒன்று நடக்கப் போகிறது என்று நினைத்ததால் சீடர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இருப்பினும், தனது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் நன்மைக்காக நரகத்தில் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தவர், இப்போது என்ன நடக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிந்ததாகக் கூறினார். அவர் நரகங்களுக்குப் பதிலாக ஒரு தூய நிலத்தில் மீண்டும் பிறக்கப் போவதை அறிந்ததால் தான் அவர் வருத்தப்பட்டார்.

அதேபோல், மற்றவர்களின் நலனுக்காக மோசமான உலகங்களில் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற வலுவான, உண்மையான விருப்பத்தை நாம் வளர்த்துக் கொண்டால், எதிர் விளைவை ஏற்படுத்தும் ஒரு பெரிய அளவிலான நேர்மறையான சக்தியை நாம் உருவாக்குகிறோம். அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன், நாம் சுயநலமாக இருக்கப் போகிறோம் என்றால், நாம் புத்திசாலித்தனமாக சுயநலமாக இருக்க வேண்டும். குறுகிய மனப்பான்மை கொண்ட சுயநலம் நம்மை வீழ்ச்சியடையச் செய்கிறது; அதே நேரத்தில் புத்திசாலித்தனமான சுயநலம் நமக்கு புத்த நிலையைக் கொண்டுவருகிறது. அது உண்மையில் புத்திசாலித்தனமானது!

துரதிர்ஷ்டவசமாக, நாம் வழக்கமாக முதலில் செய்வது புத்த தத்துவத்தின் மீது பற்று கொள்வதாகும். வேதங்களிலிருந்து, புத்த தத்துவத்தை அடைய நமக்கு போதிசித்தா தேவை என்றும், அது இல்லாமல் நாம் ஞானம் பெற முடியாது என்றும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நாம் தயக்கத்துடன், "எனக்கு புத்த தத்துவம் வேண்டும்; எனவே, நான் போதிசிட்டாவைப் பயிற்சி செய்ய வேண்டும்" என்று நினைக்கிறோம். உண்மையில், நாம் போதிசிட்டாவைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை, புத்த தத்துவத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறோம். இது முற்றிலும் தவறு. நாம் அதற்கு நேர்மாறாகச் செய்ய வேண்டும்; சுயநல நோக்கத்தை மறந்துவிட்டு, மற்றவர்களுக்கு உண்மையில் எப்படி உதவுவது என்று சிந்திக்க வேண்டும்.

நாம் உண்மையில் நரகத்திற்குச் சென்றால், மற்றவர்களுக்கோ அல்லது நமக்கோ உதவ முடியாது. நாம் எப்படி யாருக்காவது உதவ முடியும்? அவர்களுக்கு ஏதாவது பொருள் கொடுப்பதன் மூலமோ அல்லது அற்புதங்களைச் செய்வதன் மூலமோ மட்டுமல்ல, அவர்களுக்கு தர்மத்தைக் கற்பிப்பதன் மூலமும் உதவ முடியும். இருப்பினும், முதலில் நாம் கற்பிக்கத் தகுதி பெற்றிருக்க வேண்டும். தற்போது, முழு பாதையையும் - முதல் நிலையிலிருந்து கடைசி நிலையான ஞானம் வரை, ஒரு நபர் செல்ல வேண்டிய அனைத்து நடைமுறைகள் மற்றும் அனுபவங்களையும் - நம்மால் விளக்க முடியாது. ஒருவேளை, நமது சொந்த அனுபவத்தின் மூலம் சில ஆரம்ப நிலைகளை விளக்கலாம், ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. மற்றவர்களை ஞானப் பாதையில் வழிநடத்தி, அவர்களுக்கு விரிவான முறையில் உதவ, முதலில் நாம் ஞானத்தைப் பெற வேண்டும். போதிசிட்டாவை நாம் பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கான சரியான காரணம் இதுதான். இது, நமது சொந்த ஞானத்தின் மீதான சுயநல அக்கறையின் காரணமாக, நாம் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறோம், மேலும் நம் இதயங்களை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம், ஏனெனில் நாம் அவ்வாறு செய்ய கடமைப்பட்டுள்ளோம். இந்த விதத்தில் நடந்து கொள்வது முற்றிலும் தவறானது, சொல்லப்போனால் ஒரு வகையான பொய்.

வசனம் 8: அனைத்துமே மாயை என்பதை உணர்ந்து சோகத்தை எட்டு உலகளாவிய தர்மங்களால் வெல்லுதல்

கடந்து செல்லும் எட்டு விஷயங்களைப் பற்றிய கருத்துக்களின் கறைபடாத மனதின் மூலம், எல்லா நிகழ்வுகளையும் ஒரு மாயையாக அறிந்த மனதின் மூலம், எந்தப் பற்றின்மையும் இல்லாமல், எனது அடிமைத்தனத்திலிருந்து நான் விடுபடுவேன்.

இந்த வசனமானது விழிப்புணர்வு அல்லது ஞானத்தை பாகுபடுத்துவதை பற்றிப் பேசுகிறது. முந்தைய அனைத்து நடைமுறைகளும், வாழ்க்கையில் கடந்து செல்லும் எட்டு  அம்சங்கள் அல்லது நிலையற்ற விஷயங்களான, "எட்டு உலக தர்மங்கள்" என்று அழைக்கப்படும் - பாராட்டு அல்லது விமர்சனம், நல்ல அல்லது கெட்ட செய்திகளைக் கேட்பது, லாபங்கள் அல்லது இழப்புகள், மற்றும் நல்லதாகவோ அல்லது மோசமாகவோ நடக்கும் விஷயங்கள் பற்றிய கருத்துக்களின் கறைகளால் கறைபடக்கூடாது.

இந்த எட்டு வகைகளையும் வெள்ளை, கருப்பு அல்லது இரண்டும் கலந்த கலவை என குறிப்பிடலாம். வாழ்வின் எட்டு நிலைகளில் முதல் இரண்டு நிலைகளை அனுபவிக்கும்போது அதிகப்படியான உற்சாகமாக உணருவது அல்லது அடுத்தடுத்த நிலைகளை அனுபவிக்கும்போது அதிகப்படியான மனச்சோர்வு கொள்வது, இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியின் மீதான பற்றுதல் காரணமாக எழும்போது அது கருப்பாக உணரப்படுகிறது. சுயநல மனப்பான்மை மற்றும் உண்மையிலேயே இருக்கும் "நான்" பற்றிய பிடிப்பும் கூட இதற்கு ஒரு காரணம். அத்தகைய இணைப்பு இல்லாமல் எழும்போது அது இரண்டும் கலந்த உணர்வாக இருக்கிறது, ஆனால் அடுத்தடுத்த நிலைகளின் உந்துதல்களுடன் அது அவ்வாறு உணரப்படுகிறது. இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியின் மீது பற்று இல்லாமல் அல்லது சுயநலம் இல்லாமல், உண்மையிலேயே இருக்கும் "நான்" என்று நாம் புரிந்து கொள்வதால் மட்டுமே அது எழும்போது அது வெண்மையாகத் தோன்றும். ஆனால், முதல் ஏழு வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைகள், வாழ்க்கையில் எட்டு நிலையற்ற விஷயங்களான பாராட்டு, விமர்சனம் உள்ளிட்டவற்றில், உண்மையிலேயே இருக்கும் "நான்" என்று நாம் புரிந்து கொள்ளும் கருத்துக்களால் கறைபடாமல் செய்யப்படுவதன் கண்ணோட்டத்தில் இந்த வசனத்தை விளக்கினால் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இவ்விதத்தில் நமது நடைமுறையை களங்கப்படுத்துவதை எவ்வாறு தவிர்ப்பது? அனைத்து நிகழ்வுகளும் மாயையானவை என்பதை அங்கீகரிப்பதன் மூலமும், அவை உண்மையிலேயே நிலைநிறுத்தப்பட்ட இருப்பைப் பற்றிக் கொள்ளாமல் இருப்பதன் மூலமும் தவிர்க்கலாம். இவ்வாறு, இந்த வகையான பிடிப்பு மற்றும் பற்றின்மையின் பிணைப்பிலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம்.

"மாயை" என்றால் என்ன என்பது குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். பல்வேறு பொருள்கள் எங்கெல்லாம் வெளிப்பட்டாலும், அவற்றின் அம்சத்தில் உண்மையிலேயே நிறுவப்பட்ட இருப்பு நம் மனதிற்குத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில், அங்கு உண்மையிலேயே நிறுவப்பட்ட இருப்பு என்ற ஒன்று இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உண்மையிலேயே நிறுவப்பட்ட இருப்பு என்று எதுவும் இல்லாவிட்டாலும், உண்மையிலேயே நிறுவப்பட்ட இருப்பு தோன்றுகிறது, எனவே அத்தகைய இருப்பு ஒரு மாயை. இதன் பொருள், இருக்கும் அனைத்தும் உண்மையிலேயே நிறுவப்பட்ட இருப்பைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், அனைத்து நிகழ்வுகளும் அத்தகைய சாத்தியமற்ற இருப்பு முறையைக் கொண்டிருக்கவில்லை.

இதைப் புரிந்து கொள்ள, வெளிப்படையான தோற்றங்களின் வெற்றிடத்தை(இல்லாமை)ப் பற்றிய உறுதியான மற்றும் தீர்க்கமான, சரியான புரிதல் தேவை. முதலில், அனைத்து நிகழ்வுகளும் உண்மையிலேயே நிறுவப்பட்ட கண்டுபிடிக்கக்கூடிய இருப்பு இல்லாதவை என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, இந்த இல்லாத தன்மையைக் கொண்ட எதுவும் உண்மையிலேயே நிறுவப்பட்ட இருப்பைக் கொண்டிருப்பதாகத் தோன்றும்போது, உண்மையிலேயே நிறுவப்பட்ட இருப்பு முழுமையாக இல்லாதது குறித்த நமது முந்தைய உறுதிப்பாட்டை நினைவு கூர்வதன் மூலம் அந்த சாத்தியமற்ற இருப்பு முறையை மறுக்கிறோம். இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது - உண்மையிலேயே நிறுவப்பட்ட கண்டுபிடிக்கக்கூடிய இருப்பின் தோற்றம் மற்றும் அதன் வெற்றிடத்தை, முன்னர் அனுபவித்தபடி - அனைத்து நிகழ்வுகளின் மாயையான தன்மையைக் காண்கிறோம். இவ்வாறு, உண்மையிலேயே நிறுவப்பட்ட கண்டுபிடிக்கக்கூடிய இருப்பின் தோற்றம் ஒரு மாயை, அதே நேரத்தில் உண்மையிலேயே இருப்பதாகத் தோன்றும் நிகழ்வுகள் வெறும் மாயை போன்றவை, அவை உண்மையில் இல்லாத வகையில் இருப்பதாகத் தோன்றுகின்றன. அவை சார்ந்து எழுவதன் மூலம் மட்டுமே நிறுவப்படுகின்றன.

கண்டுபிடிக்க முடியாத ஒன்று, அதன் இருப்பு சார்ந்து எழுவதன் மூலம் மட்டுமே நிறுவப்படுகிறது என்பதை புரிந்துகொள்வது மிகவும் கடினம். காரணி மற்றும் செயல் இரண்டும் இருப்பதை நிறுவுவது, அவை ஒன்றையொன்று சார்ந்து எழும் நிகழ்வுகளாக இருப்பதாலும், அவை தாங்களாகவே இருந்து செயல்பட முடியாது என்பதாலும் மட்டுமே என்பதை நாம் உணர முடிந்தால், சார்ந்து எழுவதன் அடிப்படையில் வெற்றிடம் தோன்றும். இது புரிந்து கொள்ள மிகவும் கடினமான விஷயம். வேறு விதமாகச் சொன்னால் கண்டுபிடிக்கக்கூடிய சுய-இயல்பால், இயல்பாகவே கண்டுபிடிக்க முடியாத இருப்பு - நிறுவப்படவில்லை அல்லது கணக்கிடப்படவில்லை என்பதை நாம் சரியாக உணர்ந்திருந்தால், இருக்கும் பொருட்களின் அனுபவமே அதைப் பற்றிப் பேசுகிறது. அவற்றின் இருப்பு கண்டுபிடிக்கக்கூடிய சுய-இயல்பால் நிறுவப்பட்டது அல்லது கணக்கிடப்படுகிறது என்பது தர்க்கத்தால் மறுக்கப்படுகிறது. நிகழ்வுகள் அவற்றின் இருப்பை நிறுவும் அல்லது கணக்கிடும் ஒரு கண்டுபிடிக்கக்கூடிய சுய-இயல்பைக் கொண்டிருக்க எந்த வழியும் இல்லை என்பதை தர்க்கம் நம்மை நம்ப வைக்கிறது. இருப்பினும், நிகழ்வுகள் நிச்சயமாக உள்ளன, ஏனென்றால் நாம் அவற்றை செல்லுபடியாகும் வகையில் அனுபவிக்கிறோம்.

எனவே, அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றின் இருப்பை எது நிறுவுகிறது அல்லது விளக்குகிறது? அவற்றின் இருப்பு பெயர்களின் சக்தியை மட்டுமே சார்ந்து எழுவதாக நிறுவவோ அல்லது கணக்கிடவோ படுகிறதா. இது நிகழ்வுகள் இல்லை என்று சொல்லவில்லை; விஷயங்கள் இல்லை என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை. பெயர்களைச் சார்ந்து மட்டுமே பொருட்களின் இருப்பை நிறுவவோ அல்லது விளக்கவோ முடியும் என்று கூறப்படுகிறது. இது ஒரு கடினமான விஷயம்; அனுபவத்தின் மூலம் மெதுவாக, மெதுவாக மட்டுமே நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று.

முதலில், விஷயங்கள் உண்மையிலேயே இருப்பை நிலைநாட்டியுள்ளனவா இல்லையா என்பதை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதன் பொருள் அவற்றின் இருப்பு உண்மையிலேயே நிறுவப்பட்டதா அல்லது அவற்றின் சொந்த பக்கங்களில் காணக்கூடிய ஒன்றால் கணக்கிடப்பட்டதா அல்லது இன்னும் எளிமையாக சொன்னால், விஷயங்கள் உண்மையிலேயே கண்டுபிடிக்கக்கூடியதா இல்லையா என்பதை பகுப்பாய்வு செய்வதாகும். ஆனால், உண்மையில் விஷயங்களின் இருப்பை அவற்றின் சொந்த பக்கங்களிலிருந்து நிறுவும் எதையும் நாம் கண்டுபிடிக்க முடியாது. உண்மையில், நாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது: ஒன்றும் இல்லாதது கண்டுபிடிக்கக் கூடியது. இருப்பினும், நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று நாம் சொன்னால், அது தவறு, ஏனென்றால் நாம் விஷயங்களை அனுபவிக்கிறோம். விஷயங்கள் உண்மையிலேயே கண்டறியக்கூடிய வகையில் நிறுவப்பட்ட இருப்பைக் கொண்டுள்ளன என்பதை தர்க்கரீதயாக நிரூபிக்க முடியாவிட்டாலும், அவை உள்ளன என்பதை நம் அனுபவத்தின் மூலம் நாம் அறிவோம். எனவே விஷயங்கள் உள்ளன என்று நாம் நிச்சயமாக முடிவு செய்யலாம்.

இப்போது, சில விஷயங்கள் இருந்தால், அவற்றின் இருப்பை நிறுவ இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன: அவற்றின் சொந்தப் பக்கத்திலிருந்தோ, அவற்றின் சொந்த சக்தியிலிருந்தோ, அல்லது பிற காரணிகளின் சக்தியிலிருந்தோ - முற்றிலும் சுயாதீனமாகவோ அல்லது சார்ந்து எழுவதாகவோ இருக்கலாம். பொருட்களின் இருப்பை அவற்றின் சொந்த சக்தியால் சுயாதீனமாக நிறுவ முடியும் என்பதை தர்க்கம் நிரூபிப்பதால், அவற்றின் இருப்பை நிறுவக்கூடிய ஒரே வழி மற்ற காரணிகளைச் சார்ந்தது.

பொருட்கள் அவற்றின் இருப்பை நிலைநாட்டுவதற்கோ அல்லது கணக்கிடுவதற்கோ எதைச் சார்ந்துள்ளன? அவை பெயரிடுவதற்கு ஒரு அடிப்படையையும், அதைக் குறிக்கும் ஒரு கருத்தையோ அல்லது பெயரையோ சார்ந்துள்ளது. தேடும்போது நிகழ்வுகளைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவற்றின் இருப்பு அவற்றின் சொந்த சுய-இயல்பால் நிறுவப்படுகிறது என்று இருக்க வேண்டும். அப்படியானால், பொருட்களின் இருப்பு அவற்றின் சொந்த சுய-இயல்பால் நிறுவப்படவில்லை என்று கூறும் மத்யமக வேதங்கள் தவறாக இருக்கும். இருப்பினும், நாம் தேடும்போது அவற்றின் இருப்பைக் கண்டுபிடிக்க முடியாது: அவற்றின் இருப்பை நிலைநிறுத்தும் எதையும் அவற்றின் பக்கங்களில் நாம் கண்டுபிடிக்க முடியாது. அப்படியானால், நிகழ்வுகளின் இருப்பு மற்ற காரணிகளின் சக்தியால், அதாவது பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவப்படுகிறது என்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.

இங்கே "வெறும்" என்ற சொல் ஏதோ ஒன்று துண்டிக்கப்படுவதைக் குறிக்கிறது. ஆனால், துண்டிக்கப்படுவது பெயர் மட்டுமே அல்ல, அந்தப் பெயர் எதைக் குறிக்கிறது, எதை அர்த்தப்படுத்துகிறது என்பதும் அது ஒரு செல்லுபடியாகும் அறிவாற்றலின் பொருளளும் இல்லை. பெயர்கள் எதையும் குறிக்கவில்லை அல்லது அர்த்தப்படுத்தவில்லை என்றோ, பெயர்களைக் குறிக்கும் பொருள்கள் செல்லுபடியாகும் அறிவாற்றலின் பொருள்கள் அல்ல என்றோ நாங்கள் கூறவில்லை. "வெறும்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என்றால், நிகழ்வுகளின் இருப்பு பெயர்களின் சக்தியால் அல்லாமல் வேறு ஏதோவொன்றால் நிறுவப்படுகிறது. நிகழ்வுகளின் இருப்பு பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவப்படுகிறது; ஆனால், பெயர்கள் எதையாவது குறிக்கின்றன, அவை குறிப்பிடுவது செல்லுபடியாகும் அறிவாற்றலின் கூறுகள்.

எனவே, பொருட்களின் உண்மையான தன்மை என்னவென்றால், அவற்றின் இருப்பு பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவப்படுகிறது அல்லது கணக்கிடப்படுகிறது. பெயர்களின் சக்தியால் மட்டுமே தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை. ஆனால் பெயர்களைத் தவிர, எதுவும் இல்லை என்று அர்த்தமல்ல. நிகழ்வுகள் உள்ளன: பெயர்களைக் குறிக்கும் பொருள்களும், பெயர்களும் உள்ளன. பெயர்களைக் குறிக்கும் பொருள்களின் இருப்பை எது நிறுவுகிறது? அவற்றின் இருப்பு பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவப்படுகிறது.

மிக உயர்ந்த, மிகவும் துல்லியமான பார்வையான பிரசங்கிகா மத்யமகாவின் கூற்றுப்படி, ஒரு பொருள் வெளிப்புறப் பொருளாக இருந்தாலும் சரி, உள் உணர்வாக இருந்தாலும் சரி, அந்தப் பொருளை உணரும் சூழ்நிலை ஒன்றே. இரண்டின் இருப்பும் பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவப்படுகிறது; இரண்டிற்கும் உண்மையில் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் நிறுவப்பட்ட இருப்பு இல்லை. எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் இருப்பும் பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவப்படுகிறது, அதே போல் வெற்றிடம், புத்தர், நல்லது, கெட்டது மற்றும் அலட்சியம் ஆகியவற்றிலும் உள்ளது. அனைத்து நிகழ்வுகளின் இருப்பு, எல்லாவற்றின் இருப்பு, பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவப்படுகிறது.

"பெயர் மட்டும்" என்று நாம் சொல்லும்போது, அது பெயர்களின் சக்தியால் மட்டுமல்லாமல், அவற்றின் இருப்பை நிலைநிறுத்திய பெயர்களின் குறிப்பிடும் பொருள்களை துண்டிக்கிறது. "பெயர் மட்டும்" என்றால் என்ன என்பதை வேறு எந்த விதத்திலும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், ஒரு உண்மையான நபரையும் ஒரு மாய நபரையும் கருத்தில் கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றுதான், ஏனெனில் அவர்களின் இருப்பை அவர்களுக்கான பெயர்களின் சக்தியால் மட்டுமே நிறுவவோ அல்லது கணக்கிடவோ முடியும். ஆனால் இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. எது இருக்கிறதோ அல்லது இல்லாததோ அதை மனரீதியாக பெயரிடலாம், அவ்வளவுதான். நாம் மனரீதியாக "உண்மையான நபர்" மற்றும் "மாய நபர்" என்று பெயரிடலாம். ஆனால் பெயர்களைப் பொறுத்தவரை, சில பெயர்கள் இருக்கும் விஷயங்களைக் குறிக்கின்றன, சில இல்லை. "உண்மையான நபர்" என்ற பெயர் இருக்கும் ஒன்றைக் குறிக்கிறது, அதே நேரத்தில் "மாய நபர்" என்ற பெயர் இருக்கும் எதையும் குறிக்கவில்லை - அது இல்லாத ஒன்றைக் குறிக்கிறது.

சுருக்கம்

உணர்ச்சி ரீதியாக சவால் விடும் நபர்களும், அவர்கள் நம்மை நோக்கி பேசும் கடுமையான வார்த்தைகளும், மோசமான நடத்தைகளும் ஒரு மாயை என்பதை நாம் உணரும்போது, அவர்கள் உண்மையிலேயே, நிச்சயமாக, இயல்பாகவே மோசமான மனிதர்களாக, வார்த்தைகளாக அல்லது நடத்தையாக இருக்கிறார்கள் என்பதை நாம் அவர்களிடம் வெளிப்படுத்துவதில்லை. அந்த சாத்தியமற்ற வழியில் அவர்கள் இருப்பு இல்லாதவர்கள். அப்படியானால், இந்த மக்களை நாம் முத்திரை குத்தி அழைக்கும் கருத்துக்கள் மற்றும் வார்த்தைகள் அல்லது பெயர்கள் நாம் அவர்களை எப்படி கருதுகிறோம் என்பதைப் பார்க்கும்போது, அவர்களை ஆசைகளை நிறைவேற்றும் ரத்தினங்கள் என்று முத்திரை குத்துவதன் மூலம் அவர்கள் மீதான நமது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள முடிகிறது. அவர்களை அப்படிப் பார்க்கும்போது, பொறுமை, பணிவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள அவர்களுடன் நமக்கு ஏற்படும் சந்திப்பை ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பாகக் கருதுகிறோம்.

Top